Jan 4, 2026

எழுத்தாளருக்கான மதிப்பூதியம் - ஒரு விவாதம்

1. 

இந்த விஷயத்தை இப்போதைக்கு நான் முழுக்கவும் புறவயமாகவும்( Objective) ஆகவும் கொள்கையளவிலுமே (In principle) வைத்துப் பேச நினைக்கிறேன். தமிழில் பதிப்புத் தொழிலில் தேனும் பாலும் ஓடவில்லை என்று புரிகிறது. ஆனால் அது நிஜமாகவே மோசமான சூழலில் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது, பதிப்பாளர்கள் தரவுகளின் மூலம் வெளிப்படையாக வைக்காதவரை நமக்குத் தெரியப்போவதில்லை. ஒரு பதிப்பகம் நீண்ட காலம் தொழிலில் இருந்தால் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம்.



தமிழில் சமகால உலகத்தை விரிவாகப் புரிந்துகொண்டு படைப்பில் காத்திரமாக வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்ற சொன்ன நண்பரோடு நேற்று சண்டையாகிவிட்டது. அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அப்படியான சூழலுக்கான காரணங்களை யோசித்தபோது கவனச்சிதறல் ஒரு காரணமாகத் தோன்றியது. ஆமாம், சோற்றுப்பாட்டுக்கான எழுத்தாளரின் வேலை மற்றும் தொழில் போன்றவையுமே அவனுக்குக் கவனச்சிதறல்தான்.

மத்தியவர்க்க வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை எழுத்தின் மூலமே ஈட்டிக்கொண்டு தன் முழுநேரத்தையும் சிந்தனைக்கும் எழுத்துக்கும் செலவிடும் சூழ்நிலை தமிழில் எழுத்தாளர்களுக்கு இல்லை. படைப்பூக்கம் உள்ள ஒருவர் தன் மொத்த நேரத்தையும் வாசிப்பிலும் எழுத்திலும் செலவிட்டால் நல்ல படைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் கூடும். வேட்கையும் தொழிலும் ஒன்றாக இருந்தால் அங்கே அற்புதங்கள் நிகழ்கின்றன. சினிமாவுக்குப் போய் வெற்றியடையாமல் தமிழில் யாராலும் வெற்றிகரமான முழுநேர எழுத்தாளராக முடியாது. பத்து, பனிரெண்டு மணி நேரம் கூலிக்கு உழைத்துவிட்டு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தமிழ் எழுத்தாளனால் காவியங்களையா படைத்துவிடமுடியும்? பெரும்படைப்புகளுக்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது.

காட்சி ஊடகத்தின் பெருக்கத்தினால் குறையும் வாசிப்புப் பழக்கம், எழுத்தாளனுக்கென்று தனி வாசகர் திரள் (readership) இல்லாமை, புத்தகங்கள் விற்பனை ஆகாமை, அச்சாக்கம், விநியோகம், விற்பனை சார்ந்த சிக்கல்கள் என்று பதிப்புத் தொழிலில் பல பிரச்சனைகள் இருக்கலாம். பதிப்பகத்தில் ஒரு தலைப்பு விற்றால் பத்துத் தலைப்புகள் விற்காது, விற்ற தலைப்பைக் கொண்டுதான் நட்டத்தை சரிக்கட்ட முடியும் என்று முன்பு பதிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால் அந்தச் சிக்கலுக்குத் தீர்வாக POD வந்துவிட்டது. ஒரு POD அச்சில் குறைந்தபட்சம் 32 வரை அச்சாக்க முடியும் என்பது என் அனுபவமாக இருந்தது. இப்போது அது இன்னும் குறைந்து நூலாக்கத்தின் தரமும் கூடியிருப்பதுபோல் தெரிகிறது.

தமிழ் பதிப்புத் தொழில் இன்னுங்கூட முழுமையான தொழில்முறை செயல்பாட்டுக்கு மாறவில்லை. ராயல்டியைப் பொறுத்தவரை சிலர் கொடுக்கிறார்கள், சிலர் கொடுப்பதிலை அல்லது கொடுக்க முடிவதில்லை என்ற யூகமான பேச்சுக்கள்தான் இருக்கின்றனவோ தவிர முறையான விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பணம் குறித்த விஷயம் என்பதால் இதுகுறித்து நம்மிடையே வெளிப்படையான உரையாடலும் இல்லை.

நான் சொல்ல விழைவது இதுதான்: நூலாக்கத்துக்கான ஒப்பந்தங்கள் தொழில் முறையில் தெளிவாக ஏற்படுத்தப்படவேண்டும். தங்களால் ராயல்டி அளிக்க முடியுமென்றால் இத்தனை வருஷங்களில் இத்தனை பிரதிகளுக்கு இத்தனை சதவீதம் என்று ஒப்பந்தத்தில் விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். ராயல்டி சாத்தியமில்லை என்றால் அதற்கான எழுத்தாளரின் ஏற்பு பெறப்படவேண்டும் (consent). புத்தகங்களின் விற்பனைக்கு ஏற்ப சரியான கால இடைவெளியில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும், அப்படி அளிக்க முடியாத நெருக்கடியில் பதிப்பகம் இருந்தால் அது குறித்து எழுத்தாளருக்குத் தகுந்த முறையில் தெரிவிக்கப்படவேண்டும். நூலக ஆணை கிடைத்திருந்தால் அது குறித்த தகவல்கள் எழுத்தாளருக்கு அளிக்கப்படவேண்டும். மின்னூல் பதிப்பிக்கப்பட்டு அதன் அறுபது அல்லது எழுபது சதவீத விற்பனைத் தொகை எழுத்தாளருக்கு அளிக்கப்படவேண்டும்.

பதிப்பகங்கள்தான் நூல்கள் மற்றும் வாசிப்புச் சூழமைவின் ஆதார அச்சாக இன்னும் இருக்கின்றன. ராயல்டி கொடுக்கப்படுகிறது என்பதைவிட முதலில் அதுகுறித்த வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். குறைந்தபட்சம் இவையெல்லாம் முதலில் தாளில் வரவேண்டும். எழுத்தாளன் வேறொரு வேலையிலோ அல்லது தொழிலோ இருந்துகொண்டு வாழ்க்கைப்பாட்டைச் சமாளிக்கிறவனாக இருக்கலாம், ஏன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறவனாகக்கூட இருக்கலாம். ஆனால் எழுத்தின் மூலம் பெறும் தொகை எவ்வளவு சிறியதென்றாலும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வெகு அந்தரங்கமானது. எதிர்காலத்தில் தமிழில் எழுத்தை நம்பி ஒரு எழுத்தாளர் வாழ முடியும் என்ற சூழலை உருவாக்குவது எவ்வளவு தூரத்துக் கனவாக இருந்தாலும் அதை நோக்கி நடப்பதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.

சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருக்கும் நிலையில் இதுகுறித்து வெளிப்படையான உரையாடல்கள் நடக்கவேண்டும்.

2.

மேற்கில் ஆங்கிலப் பதிப்புத் துறையும் ராயல்டியும் பொதுவான விதத்தில் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்ந்தேன். இவை இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பதால் நடைமுறையில் சற்று முன்பின்னாகவும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் பதிப்பகத்துக்கும் வேறுபட்டிருக்கவும் வாய்ப்புண்டு. இங்கு மேற்கு என்பதை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகியவை. மேலும் ஆங்கில மொழியின் சந்தை மிகப்பெரியது, நம்முடையது மிகச்சிறியது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேற்கில் பதிப்பாளர் புத்தக உரிமைகளை வாங்கி வெளியிடுகிறார். எழுத்தாளருக்கு அதற்கான முன்பணம் (Advance) வழங்கப்படுகிறது. பிறகு புத்தக விற்பனையின் சதவீதமாக ராயல்டி ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியருக்கு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையைப் புத்தகத்தின் வருவாய் ஈடுகட்டிய பிறகே ராயல்டி திரும்பவும் வழங்கப்படுகிறது. இந்த முன்பணம் புதிய எழுத்தாளர்களுக்குக் குறைவாகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு அதிகமாகவும் இருக்கும். ஆனால் பல புத்தகங்கள் ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட முன்பணத்தையே ஈடுகட்டுவதில்லை என்பதால் குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எழுத்தாளரின் வருமானம் என்பது அந்த முன்தொகை மட்டுமே.

ராய்ல்டி தொகை ஒவ்வொரு புத்தக விற்பனைக்கும் கணக்கிடப்பட்டு ஆறுமாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் புத்தகத்தின் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலை (Recommended Retail Price) அடிப்படையிலும் சில சமயம் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் தள்ளுபடி போன்றவை கழிக்கப்பட்ட பிறகு பதிப்பாளருக்குக் கிடைக்கும் நிகர வருவாயின் மூலமும் கணக்கிடப்படுகிறது மொழிபெயர்ப்பு, திரைப்பட உரிமை, ஒலிப்புத்தகம் போன்ற துணை உரிமைகளின் மூலமும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆசிரியருக்கு வருவாயாகக் கிடைக்கிறது.

ராயல்டி விகிதங்கள் புத்தகத்தின் வடிவம், பதிப்பாளர், ஆசிரியரின் அனுபவம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ப மாறுபடும் (முகவர்கள் சிறந்த ஒப்பந்தம் பெற உதவுகிறார்கள்). சராசரியான ராயல்டி விகிதங்கள் பின்வருமாறு:

1)கெட்டி அட்டை- நூலின் சில்லறை விற்பனை விலையில் 10-15% வரை.

2)பேப்பர்பேக்- நூலின் சில்லறை விற்பனை விலையில் 7.5-10% வரை.

3)மின்னூல் - 25% வரை

4)ஒலிப்புத்தகம்- 10 முதல் 15 % சதவீதம் வரை, நூல் விவரிப்பாளருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

பல ஆசிரியர்கள் Amazon KDP போன்ற சுய பதிப்பைத் தேர்வு செய்கின்றனர், மின்னூலுக்கு 35–70% என்ற அளவிலும் அச்சு புத்தகத்துக்கு 40–60% (அச்சு செலவு போக) ராயல்டி கிடைக்கிறது. இதில் முன்பணம் என்ற ஏற்பாடு இல்லை, ஆனால் முழு கட்டுப்பாடு மற்றும் பணம் விரைவாகக் கிடைப்பதால் இது மேற்கில் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இது பைரசிக்கு வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் பெஸ்ட் செல்லர்கள் தவிர்த்து பெரும்பாலான ஆசிரியர்கள் இதில் சுமாரான வருமானமே பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ராயல்டி பதிப்புரிமை என்பது காலம் முழுவதும் தொடரும். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் ஆசிரியரின் வாழ்நாளுக்குப் பிறகும் 70 ஆண்டுகள் காப்புரிமை அவரைச் சார்ந்ததாக இருக்கிறது.

3.

எழுத்தாளன் எப்போது சக்ரவர்த்தியாக வாழ்வான்?
--------------------------------------------------------------------------------
தமிழ்ச்சூழலில் எழுத்தாளனுக்கான வருவாய் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் வேறு என்ன சாத்தியங்கள் உள்ளன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து சுரேஷ் ப்ரதீப் தனியாக ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி சற்று யோசிக்கலாம்.

எழுத்தாளர்களுக்கு நல்ல முகவர் வேண்டும். ஆனால் எழுத்தாளனுக்கே மங்கிய பொருளியல் வாய்ப்புகள்தான் என்ற நிலையில் முகவருக்கான வருவாய் எங்கிருந்து வரும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே இப்போதைக்குப் பதிப்பகங்களே எழுத்தாளனுக்கான முகவராக இருப்பதுதான் சாத்தியம். சில பதிப்பகங்கள் அதற்கான முயற்சிகளைச் செய்வதும் வரவேற்புக்குரியது.

மூத்த எழுத்தாளர்கள் முப்பது நாற்பது வருஷங்கள் இயங்கி தங்களுக்குத் தனியான வாசகப் பரப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரு நூல் வெளியாகும்போது குறைந்தபட்சம் முந்நூறு பிரதிகள் விற்பனை சாத்தியமாகக் கூடும். இயல்பாகவே அவர்கள் இதுவரை தாங்கள் எழுதிய அத்தனை தலைப்புகளையும் ஒரு குடைக்குக் கீழே வெளியிடும் தங்களுக்கான தனிப் பதிப்பகங்களையும் கண்டுவிட்டார்கள். மற்ற எழுத்தாளர்களுக்கு அந்த வாய்ப்பு இருப்பதில்லை. சென்னைப் புத்தகக் காட்சி போன்ற பெரிய நிகழ்வில் ஒரு நாவலோ சிறுகதைத் தொகுப்போ ஐம்பது பிரதிகள் விற்றாலே சாதனை என்று கருத வேண்டியிருக்கிறது.

முதல்கட்டமாக நவீன தமிழ் இலக்கியத்தின் வாசகப்பரப்பு என்ன என்பது அறுதியிடப்படவேண்டும். இப்போது பிரபலமாகி வரும் மக்கள் பதிப்பு மாடலுக்கு முன்பே, தமிழில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்ற நூல் ஒரு புளியமரத்தின் கதை என்று சொல்லப்படுகிறது (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ”ஒரு புளியமரத்தின் கதை” நூலுக்கும் மக்கள் பதிப்பு வந்த ஞாபகம்).

ஒரு நவீன இலக்கிய நூல் அதிகபட்சம் எவ்வளவு விற்றிருக்கிறதோ, அதனை ஒரு அளவுகோலாகக் (bench mark) கருதலாம். புதிதாக எழுத வரும் எழுத்தாளனுக்கு முன்னுள்ள சாத்தியமான வாசகப்பரப்பு அது தொழில்முறையில் சொல்வதென்றால் அடையவேண்டிய சந்தை (untapped market) அது. மக்கள் பதிப்புகளில் சற்று சேவை மனப்பான்மை இருப்பதால் அசல் வந்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் இயங்கக்கூடும். மக்கள் பதிப்பு மாதிரியில் நாம் முக்கியமாகப் பெற்றுக்கொள்ளும் விஷயம் என்பது, இத்தனை வாசகர்களை அடையமுடியும் என்ற தரவுதான்.

பதிப்பு என்ற supply chain இல் எழுத்தாளன் மிகப் பலகீனமானவனாக இருக்கிறான். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரமேஷ் கல்யாண் அழகாகச் சொல்லியிருந்தார். அதேபோல் பதிப்பகங்களின் நூல் தேர்வும் முழுக்கவும் தொழில் சார்ந்ததாக, மேற்கைப்போல் அதன் விற்பனை சாத்தியம் ஆராயப்பட்டு பதிப்புக்கான ஏற்பும் நிராகரிப்பும் செய்யப்படுவதில்லை.போடுகிறீர்களா என்று சில எழுத்தாளர்கள் கேட்கிறார்கள், கொடுக்கிறீர்களா என்று சில பதிப்பாளர்கள் கேட்கிறார்கள். நட்புக்காகப் புத்தகம் போடுவதும் இங்கே வழக்கமாக நடக்கிறது. ஏறக்குறைய எழுத்தாளர்கள் எல்லோருமே வேறு பணிகளில் வருவாய் ஈட்டும் பகுதிநேர எழுத்தாளர்கள் என்பதால் ராயல்டி குறித்த பெரிய எதிர்பார்ப்புகளும் பேச்சுக்களும் இருப்பதில்லை.

வேறு என்ன செய்யலாம்? திரும்பவும் இலக்கிய முகவர்கள் மற்றும் connoisseur களின் தேவைதான் தோன்றுகிறது. இலக்கியப் பிரதிகளை அதே வடிவில் காட்சி ஊடகத்துக்கு சுவீகரிக்கச் சாத்தியம் குறைவு என்பதால் ஒரு சிறுகதைக்குள்ளோ அல்லது நாவலுக்குள்ளோ இருக்கும், நெடுந்தொடராகவோ திரைப்படமாகவோ விரிவாக்கத்தக்க சிறு புள்ளி அல்லது மையத்தக் கண்டுபிடித்து மூலக்கதைக்கான வருவாயைப் பெறுவதற்கான சாத்தியங்களை ஆராயலாம். முன்பெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்போது சூழல் சற்று பராவாயில்லை என்று தோன்றுகிறது. நண்பர் க.சீ. சிவகுமார் ”காதல் ஒளிக” என்றொரு தொடர் கதை எழுதிய ஞாபகம். அது அவருக்குத் தெரியாமலேயே ஒரு படமாக வந்து பெரிய வெற்றி பெற்றது. சிவா தன்னியல்புப்படி அதை அலட்சியமாகக் கடந்துவிட்டார்.

இன்னொன்று, தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் உடனடியாக பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆங்கிலச் சந்தையில் தமிழ் மொழிபெயர்ப்புகளின் மீது வைக்கப்படும் தரம் சார்ந்த விமர்சனங்களைப் பிறகு பரிசீலித்துக்கொள்ளலாம் என்ற தீர்க்கத்தோடு அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழிலிருந்து ஒரு நூறு நாவல்களேனும் ஆங்கிலத்துக்குப் போனால் அதில் நிச்சயம் பத்துப் பதினைந்து நாவல்களாவது சாதகமான விளைவுகளை உருவாக்கும். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் தமிழக அரசின் ஆதரவில் சென்னையில் நடக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் விளைவுகள் என்ன என்பதையும் கண்டறிய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

4.

எழுத்தாளர்களுக்கான மதிப்பூதியம் குறித்த பேச்சில் இறுதியாக,

செல்மா என்றொரு படம் பார்த்தேன். வட அமெரிக்காவில் ஓட்டுரிமை வேண்டி கறுப்பின மக்களும் மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களும் நடத்திய போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படம். அதில் எந்தவொரு செயல்பாட்டிலும் மாற்றுத்தரப்பின் மனசாட்சியை நோக்கிப் பேசுவதின் முக்கியத்துவத்தைக் கூறும் காட்சியொன்று உண்டு. அதுபோல சூழலில் இருக்கும் அனைத்து அங்கத்தினருடைய குறிப்பாக பதிப்பாளர்களின் மனசாட்சியை நோக்கியதுதான் மதிப்பூதியம் குறித்த இந்தப் பேச்சும். சாரு வாசகர்களிடம் பணம் கேட்டபோது அவர் இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று வசை பாடப்பட்டார். அவர் எங்கிருந்து அந்தப் பேச்சைத் தொடங்கினார் என்று இப்போது ஒரு யூகமாகப் புரிகிறது.

மேலும் இங்கே எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. பெருந்தொற்றுக்கு முன்பு ஏற்கெனவே இங்கே சில பதிப்பகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவைதான். எழுத்தாளர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவரங்கள்கூட வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பதிப்பாளர்களுக்கு தொழில் தெரியும், எழுத்தாளர்கள் யாரும் குழந்தைகளும் இல்லை. ஆகவே யாருக்கும் தனிப்பட்ட விதத்தில் அழுத்தம் கொடுக்கும் நோக்கமின்றி சூழலை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவதற்குத் தேவையான உரையாடலின் பொருட்டு கீழே உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

1.விற்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் எழுத்தாளருக்கு எவ்வளவு எளிய தொகையாயினும் மதிப்பூதியம் சென்று சேர்வதை பதிப்பாளர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நடைமுறைச் சிக்கல்களை இருதரப்பாரும் பொறுப்போடு அனுசரிக்க வேண்டும். இந்திய காப்புரிமைச் சட்டம், பிரிவு 19(3) இல் குறிப்பிடப்பட்டவற்றை பதிப்பாளர்கள் தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நூலாக்கத்துக்கு எழுத்தாளர்கள் நூல்களைச் சமர்ப்பிக்கும்போது அவர்களிடம் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். மிக முக்கியமாக மதிப்பூதியம் வழங்குவதை தார்மீக உறுதிமொழியாக முன்வைக்கவேண்டும்.

2. எழுத்தாளர்கள் மதிப்பூதியம் குறித்த தெளிவான நிலைப்பாட்டுக்கு வருவது மிக முக்கியமானது. ஏற்கெனவே வெளியிட்ட நூல்களுக்கு ஒப்பந்தம் இருந்து ஏதேனும் தொகை நிலுவையில் இருந்தால், அவற்றை அளிக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். மதிப்பூதியம் முக்கியமில்லை, நூல்கள் வாசகப்பரப்புக்குச் சென்று சேர்வது முக்கியமானது என்ற நோக்கம் இருந்தால், மதிப்பூதியம் தேவைப்படும் யாரோ ஒரு எழுத்தாளர் சூழலில் இருக்கிறார் என்ற எண்ணத்தை நாம் மனதில் பதிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானது. ஆனால் இதில் என் யூகம் "You don't have a say in this" என்ற அளவில்தான் எழுத்தாளர்களின் நிலை இருக்கும். மதிப்பூதியத்தைக் கட்டாயக் கோரிக்கையாக முன்வைக்கும் எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தனிப்பட்ட விதத்தில் எனக்கு இல்லை.

3. சுய பதிப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தாது. எழுத்தாளர்- பதிப்பகம்- வாசக சமூகம் என்ற சூழமைவுதான் இன்னும் ஆரோக்கியமானது என்று நம்புகிறேன். உங்களுக்குத் தனித்த வாசகப்பரப்பு இருந்து, நிர்வாக வகையில் உதவுவதற்கு நண்பர்களோ குடும்பதினரோ இருந்தால், இதை தாராளமாக முயற்சிக்கலாம். மின்னூலாகப் பதிப்பித்து விரும்புகிற வாசகர்களுக்கு நூல் உடனடியாக கிடைப்பதையும் உறுதிப்படுத்தலாம். வருவாய் வாய்ப்புகள் இப்போதைக்கு சற்று முன்பின்னாகத்தான் இருக்கக்கூடும்

4. வாசிப்புச் செயல்பாட்டுப் பரவலாக்கத்தில் உற்சாகமாகப் பங்கெடுக்கும் வாசகச் சமூகம் எழுத்தாளனுக்கு மதிப்பூதியம் கிடைப்பதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். வாசகர்களில் பலர் கடன் வாங்கிப் புத்தகம் வாங்குகிறவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம். இந்த நோக்கில் வாசக சமூகத்தின் சொல்லுக்கு தனி மதிப்புண்டு. ஆகவே தமிழ் வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்கு ஏற்புடையபட்சத்தில், சென்னைப் புத்தகக்காட்சியில் நீங்கள் வாங்கிய நூல்களின் பட்டியலோடு சேர்த்து மொத்தத் தொகையையும் ரசீதின் திரைச்சொட்டையும் இணைத்து #royaltycampaign2026 என்ற குறிச்சொல்லோடு பதிவிடுங்கள்.

இந்த உரையாடலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

(எழுத்தாளர்களுக்கன மதிப்பூதியம் குறித்ததாக முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு)

Jan 2, 2026

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது நிகழ்வு - 2025

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – 2025 விருது நிகழ்வில் கலந்துகொண்டது நிறைவையும் ஊக்கத்தையும் அளித்தது. ரமேஷ் பிரேதன் மறைந்துவிட்ட சூழலில் அந்த விருதுக்கான தொகையை ஐந்து இளம் எழுத்தாளர்களுக்கு பட்டயத்தோடு பகிர்ந்து அளித்ததின் மூலம் சரியான விதத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவு செய்திருக்கிறார்கள்.

பதினைந்து ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருது நிகழ்வுகள் நிகழ்கின்றன. முதன்முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்தாண்டே அமைந்தது. எழுத்தாளர்-வாசகர் கலந்துரையாடல் அரங்கில் பங்கேற்றதும் நிறைய நண்பர்களைச் சந்தித்ததும் செறிவான அனுபவங்களாக இருந்தன. நல்ல திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அனுபவங்களால் இருநாள் நிகழ்வுகளையும் சராங்கமான லகுவோடு பிசிறின்றி நடத்தினார்கள்.

வெள்ளி மாலை எட்டேகாலுக்கு கோவையை அடைந்தேன். நண்பர் தேஜஸ் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். ராஜஸ்தானி சங்கத்துக்கு அருகாமையில் இருந்த விடுதியில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியும் நானும் அறையைப் பகிர்ந்துகொண்டோம். நான் சென்றபோது நல்லதம்பி, ஜெயந்த் காய்கினியுடன் லாபியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். புக் பிரம்மா நிகழ்வில் ஜெயந்தின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்திக்கொண்டேன். இனிமையான பேச்சும் நகைச்சுவையும் அவருடைய தனித்தன்மைகள். இனிமேல்தான் அவரை வாசிக்கவேண்டும்.

பையை அறையில் வைத்துவிட்டு டீக்கடையைத் தேடிச் செல்லும் வழியிலேயே ராஜஸ்தானி சங்கத்தைக் கண்டேன். அதன் முகப்பில் ஜீவ கரிகாலன், தூயன் உள்ளிட்ட நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தே பேச்சு தொடங்கிவிட்டது. ஒருமணி நேரத்துக்குப் பிறகு கிளம்பி கரிகாலன், தூயன், நான் மூவருமாய் விடுதிக்குத் திரும்பினோம். இரவு பத்தரை வரைக்கும் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிய தூயன் மறுநாள் காலை அமர்வுக்கும் வந்திருந்தார்.

பனிக்குளிர்மை படர்ந்திருந்த சனிக்கிழமை காலையில் நல்லதம்பியும் நானும் தேனீர் அருந்த செல்ல, அங்கே சுனில் கிருஷ்ணன், சித்ரன், கீரனூர் ஜாகிர் ராஜா, ஏ.வி.மணிகண்டன் என்று பல நண்பர்கள் இணைந்துகொள்ள, காலை எட்டரை வரை அரட்டை தொடர்ந்தது
















டிசம்பர் 20 காலை முதல் அமர்வு, பதிப்பாளர்கள் ஜீவ கரிகாலன் மற்றும் அழிசி சீனிவாசன் ஆகியோரின் கலந்துரையாடல். இதை செந்தில் ஒருங்கிணைத்தார். அறுபதுக்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் யாவரும் பதிப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் தமிழ் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளை மின்னூலாக்கும் அழிசியின் முயற்சிகள் என்று இரண்டு கோணங்களில் உரையாடல் அமைந்தது. இன்றைய பதிப்புச் சூழல், சாத்தியங்கள் மற்றும் சவால்கள் என்று விரிந்த உரையாடலில் ஜீவ கரிகாலன், ரமேஷ் பிரேதன் உடனான தன்னுடைய நட்பனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இரண்டாவது அரங்கு என்னுடையது. சிபி ஒருங்கிணைத்தார். அரங்கில் நிரம்பியிருந்த கூட்டத்தைக் கண்டு மெல்லிய பதட்டம் இருந்தாலும் அந்தக் கணத்தின் மனநிலையின் அடிப்படையில் பதில்களை வெளிப்படுத்துவது என்ற தீர்மானம் சற்று உதவியது. என் சிறுகதைகளில் இருக்கும் நாவல் தன்மை, இருவேறுபட்ட உலகங்கள், டாங்கோ நாவல் குறித்ததாக கேள்விகள் அமைந்தன. நாவல் வடிவத்தின் மீதான என்னுடைய விருப்பத்தை பகிர்ந்துகொண்டேன். சில வாசக நண்பர்களோடு கீரனூர் ஜாகிர்ராஜா, சுனில் கிருஷ்ணன், இல சுபத்ரா, லாவண்யா சுந்தரராஜன், லதா அருணாச்சலம் போன்றோர் ஏறக்குறைய அனைத்து அமர்வுகளிலும் தங்களுடைய கேள்விகளை முன்வைத்து உரையாடலை முன்னெடுத்துச் செல்லப் பங்களித்தார்கள். தன் கேள்வியின் ஊடே ஜெயமோகன் டாங்கோ நாவலைக் குறித்து வைத்த நேர்மறையான மதிப்பீடு நிறைவையும் உற்சாகத்தையும் அளித்தது.

அடுத்து குலசேகரன் அவர்களுடைய அமர்வு. சரண்யா ஒருங்கிணைத்தார். அவருடைய சிறுகதைகள், தங்கநகைப் பாதை நாவல், எழுத்துமுறை, நிலத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள், அதற்கெதிரான மக்களின் போராட்டங்களை எப்படி அணுகுவது, அடக்கு முறைக்கு எதிராக சாமானியர்களுக்கு சாத்தியமாகும் அரசியல் என்று சற்றே உரத்து அமைந்தது குலசேகரனின் அரங்கு.
மதியவுணவுக்குப் பிறகு அரங்கத்துக்கு வெளியேயான நண்பர்களின் உரையாடல் ஈர்த்துக்கொண்டதால் ரம்யா ஒருங்கிணைத்த யாழன் ஆதியின் அரங்கில் முழுமையாகப் பங்கெடுக்க இயலவில்லை. ஜிஎஸ்எஸ்வி நவீன் ஒருங்கிணைத்த அரிசங்கரின் அரங்கில் பாண்டிச்சேரி குறித்துப் பொதுப் புத்தியில் உறைந்த விஷயங்களைக் கண்டித்தார். ஆரோவில் பகுதியைக் குறித்து இரண்டுவிதமான நாவல்களை எழுதமுடியும் என்றார். பிரபஞ்சனின் பாண்டிச்சேரி, ரமேஷ் பிரேதனின் பாண்டிச்சேரி மற்றும் தன்னுடையது குறித்துப் பேசினார். பிரபஞ்சனை சந்தித்த அனுபவத்தையும், எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ள பாண்டிச்சேரியின் களங்களையும் சுட்டிக் காட்டினார். பாண்டிச்சேரியில் பாரதியின் காலத்தை ஒட்டிய ஒரு நாவலை எழுதிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாலையில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா அவர்களுடைய அரங்கை ஈநாடு ராஜு ஒருங்கிணைத்தார். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியான அணுகுமுறை அல்ல என்றார். உலகில் இருபது கோடி தெலுங்கு பேசும் மக்கள் இருக்கின்ற நிலையில் இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து பத்து கோடி பேர் மட்டும் இருப்பதாகவும் மற்றவர்கள் உலகெங்கும் சிதறிக் கிடப்பதாகவும் குறிப்பிட்டார். பொருள் வேட்டலை முன்னிட்டு மொழியின் மீதான தெலுங்கு மக்களின் கவனமின்மை, எம்.எஸ், சுப்புலட்சுமியின் கதையை நாவலாக எழுதியபோது, எழுந்த எதிர்பாராத சர்ச்சைகள், எழுத்தாளரான தன்னுடைய தந்தையுடனான உறவு, தெலுங்கில் மற்ற வடிவங்களைவிட சிறுகதை வடிவம் வலுவாக இருப்பது, மொழிபெயர்ப்புகள் இல்லாமல் அவ்வடிவத்தின் மேதைகள் பலரும் தெலுங்குக்கு வெளியே தெரியாமல் இருப்பது, கோவை மக்களுடன் தெலுங்கு மக்களின் உறவு என்று பல புள்ளிகளைத் தொட்ட அவருடைய பேச்சு ஆழத்தோடு அமைந்திருந்தது.

அதற்கு அடுத்து, மதார் ஒருங்கிணைத்த அனுராதா ஆனந்தின் அரங்கில், கவிதைகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள், அவருடைய தேர்வுமுறை என்று பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஞாயிறு காலையில் திரும்பவும் பனிக்குளிரினூடே தேனீர் அரங்கம் மற்றும் நடைப்பேச்சு. கீரனூர் ஜாகிர் ராஜா, சித்ரன், நான் மூவருமாக நீண்ட நடை சென்றபோது தஞ்சை பிரகாஷ் உள்ளிட்டு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.

அன்றைய நாளின் முதல் அமர்வாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிஞ்சிவேலன், நல்லதம்பி ஆகியோருடனான கலந்துரையாடலை சுசித்ரா ஒருங்கிணைத்தார். நல்லி திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போது பின்பற்றும் தேர்வுமுறை மற்றும் உத்திகள் குறித்து பகிர்ந்துகொண்ட குறிஞ்சிவேலன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் மொழிபெயர்ப்புக்கும் விருதளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நல்லதம்பி அவர்கள், கன்னட எழுத்தாளர் ஸ்ரீனிவாஸ் வைத்யா எழுதிய ”ஹல பெந்து ஹல்லா” (தமிழில்- ஓடை) நாவலை மொழிபெயர்ப்பதில் அதன் வட்டார வழக்கினால் ஏற்பட்ட சவால்களைப் பகிர்ந்ததோடு யாத்வஷேம் நாவலை மொழிபெயர்த்து முடித்தபின்னும் நான்காண்டுகள் வரை வெளியிட முடியாமல் இருந்த சூழலையும் பகிர்ந்துகொண்டார். மொழிபெயர்ப்பின் எடிட்டிங் உத்திகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

எழுத்தாளர் வாசகர் சந்திப்பில் கடைசி அரங்கு ஜெயந்த் காய்கினியுடன். சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். இதமான, நகைச்சுவை ததும்பிய பேச்சின் வழியே தன்னுடைய மும்பை வாழ்க்கை, உழைப்பையே கடவுளாகக் கருதும் அதன் இயல்பு, வருகிறவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் அதன் பெருந்தன்மை என்று மும்பையின் ஆன்மாவைக் குறித்த ஒரு நல்ல சித்திரத்தை அளித்தார். தன் கதைகளின் பின்புலமாக மருத்துவமனை இருப்பது, சாதாரண எளிய சம்பவங்களைக் கதைகளாக்குவதற்கான காரணம், திரைத்துறை அனுபவம் என்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற விதத்தில் பேசினார். உள்ளுணர்வின் உந்துதலில் எழுதுபவர் மற்றும் நன்கு திட்டமிட்டு எழுதுபவர் என்று இருவகையான எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு தான் முதல் வகையைச் சேர்ந்தவன் என்றார். முதல் வரியைத் தூண்டிற்புழுவாகப் போட்டு இரண்டாவது வரியைப் பிடிப்பது பற்றி அவர் கூறியது மெய்யான கூற்று. மதுராந்தகம் நரேந்திரா கருத்தாழம் என்றால் ஜெய்ந்த் நகைச்சுவையின் ஆழம்.

கபிலன் இருக்க கவலை ஏன் என்று ஞாயிறு பிற்பகல் பெரும்பாலும் அரங்குக்குக் வெளியில்தான் பொழுது கழிந்தது. முற்பகல் கே.என். செந்தில் வந்திருந்தான். தேனீர்க்கடை வாசலில் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நண்பர்கள் பலரும் இணைந்துகொள்ள அரட்டை பல கோணங்களில் மாறி மாறிச் சென்று மதியவுணவுக்குப் பிறகு விடைபெற்றுச் சென்றான். அரசியல் முதல் ”ஆபீஸ்” நாவல் வரை 360 பாகை கோணத்தில் பல்வேறு விஷயங்களையும் சிலமணி நேரங்களுக்கு சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினார் போகன். எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நம்முடன் தனியாகவும் பேசிவிடும் நுட்பம் கொண்டவராக அவரை நினைத்துக்கொண்டேன்.

இல.சுபத்ரா நண்பர்களுடன் இணைந்து நடத்தும் வாசிப்புக் குழுமத்தின் நண்பர்களை அறிமுகப்படுத்தினார். சுபத்ராவும் நண்பர்களும் முக்கியமான காரியத்தை தொடர்ச்சியாகச் செய்வது பாராட்டுக்குரியது. என்னுடைய கவிதைகள் குறித்த கூர்மையான அவதானிப்புகளை முன்வைத்துப் பேசினார் நண்பர் விஸ்வா. காதலும் ஏனைய பூதங்களும் தொகுப்பில் தனக்குப் பிடித்த இரு கதைகளின் அம்சங்களை நண்பர்களின் முன்னிலையில் விரிவாகப் பேசிய நண்பர் திருச்செந்தாழை, இலக்கியத்தில் வலுவான கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் எழுத்தாளர் சித்ரன், பழனி கீரனூர் வட்டார சொல்லகராதிப் பணியை முடித்திருக்கும் நிலையில் தன் அடுத்த நாவலுக்கான தனித்துவமான களத்தை விவரித்த கீரனூர் ஜாகிர் ராஜா, துடிப்பான செயல்பாட்டையும் பேச்சையும் கொண்ட கவிஞர் மொழிபெயர்ப்பாளர் கயல், வாசக நண்பர் அரவிந்தன் என்று பலரோடும் இனிய பேச்சுக்கள் வாய்த்தன. இசை சனிக்கிழமை முழுக்க இருந்தான். எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், சு.வேணுகோபால், பாவண்ணன், எஸ்.ஜே. சிவசங்கர் என்று பலரையும் சந்திக்க முடிந்தது. குலசேகரனோடும் சுனிலுடனும் தொடுவதும் விலகுவதுமாக இரு நாட்களுக்கும் பேச்சு நீண்டது.

தமிழின் சமகால இலக்கிய முகங்கள் பலரும் கூடியிருக்கும் தருணத்தில் அத்தனை படைப்புலகங்களின், கருத்துருக்களின், ஆளுமைகளின், வாழ்க்கை அனுபவங்களின் சாரம் திரண்ட திரளுக்கு மத்தியில் நின்றிருக்கும்போது, என்ன செய்கிறோம், இனி என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளும்போது கிடைக்கும் விடை மிக உற்சாகமானது.

ஆளுமைகளுக்கு விருதளித்து அவர்களுடைய படைப்புலகை முழுமையாகப் பேசி புது வாசகர்களிடையே பரவலாக்குவது, எழுத்தாளர்-வாசகர் சந்திப்புகளின் மூலம் வாசகத் திரளின் கவனத்தை எழுத்தாளரின் மீது குவிப்பது, பல்வேறுவிதமான படைப்பாளர்களை ஓரிடத்தில் சந்திக்க வாய்ப்பை உருவாக்குவது என்று நிகழ்வின் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்நிகழ்வு வாசகர்களுக்கு அறிமுகங்களையும் தொடக்கங்களையும் சாத்தியமாக்குகையில் எழுத்தாளர்களுக்கு உணர்வுப்பூர்வமான பெறுமதிகள் கிடைக்கின்றன என்று கருதுகிறேன். தீவிரமான விவாதங்களுக்கு அவர்கள் காவிய முகாம்களை ஒருங்கிணைக்கிறார்கள் என்று யூகிக்கிறேன்.

இரண்டாவது நாள் மாலை இளம் எழுத்தாளர்களுக்கான விருதளிப்பு, ரமேஷ் பிரேதன் ஆவணப்படம் திரையிடல்,விருந்தினர்களின் உரைகள் என்று நிகழ்வு தொடர்ந்தது. உரைகளை இனிமேல்தான் ஸ்ருதி டிவியில் பார்க்கவேண்டும். இரவு ஒன்பது மணிக்கு பாலா என்னை காரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட பத்தே கால் நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வண்டியேறினேன்.


***

கவிதையில் அர்த்தமும் அனுபவமும்- துரிஞ்சி கவிதைத் தொகுப்பு குறித்து

கல்விப்புலம் சார்ந்த மேற்கத்திய இலக்கிய விமர்சன மரபில் உருவான ரஷ்ய உருவவாதம் (Russian Formalism) மற்றும் புது விமர்சனம் (New Criticism) ஆகிய இலக்கியக் கோட்பாடுகளின் சில முக்கிய அம்சங்களை மீள்பார்வை செய்துகொள்வது இலக்கிய விமர்சனத்தை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கு உதவும். இவை புதிய விஷயங்கள் அல்ல, கல்விப்புலம் சார்ந்த விமர்சனத் துறையில் ஏற்கெனவே நூற்றாண்டாகப் புழங்குகிறவைதான். இலக்கிய விமர்சனத்தில் இவ்விரு கோட்பாடுகளும் இன்றைக்கு அவற்றின் ஆதார வடிவிலேயே பயிலப்படாவிட்டாலும், இவற்றிற்குப் பிறகு உருவாகி வந்த அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற கோட்பாடுகளுக்கு அடிப்படைகளை வழங்கியிருக்கின்றன.

1910 மற்றும் 1920 களில் ரஷ்ய உருவவாதம் மேலெழுகிறது. இலக்கியப் படைப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிடவும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு உருவவாதிகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு இலக்கியப்படைப்பில் உள்ள இலக்கியத்தன்மையை (Literariness) உணர்ந்துகொள்ள. நாம் படைப்பின் உள்ளடக்கம், ஆசிரியரின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழல், உளவியல் காரணிகள் போன்றவற்றைவிட படைப்பின் வடிவத்துக்கும் அப்படைப்பில் இயங்கக்கூடிய இலக்கிய நுட்பங்கள் அல்லது கருவிகளை ஆராய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உருவவாதிகள் நான்கு முக்கிய கருத்துருக்களை முன்வைக்கிறார்கள்

1. இலக்கியத்தன்மை (Literariness) – இது நம்முடைய அன்றாட புழங்குமொழியிலிருந்து இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டுகிற கருவிகளைப் பேசுகிற கருத்துரு.

2. புத்தாக்கம் (Defamilirization)- நம்முடைய நினைவில், அறிதலில் ஏற்கெனவே பதிந்திருக்கிற வழக்கமான விஷயங்களை இலக்கியக் கருவிகளின் (Poetic devices) மூலம் புத்தாக்கம் செய்து வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிப்பதைக் விவாதிக்கிறது இக்கருத்துரு.

3. அறிவியல் பூர்வமான அணுகுமுறை (Scientific Approach) - இலக்கிய வாசிப்பை விமர்சனத்தின் கருவிகளைக்கொண்டு அறிவியல் பூர்வமாக அணுகுவதை உருவவாதிகள் முன்னிறுத்துகிறார்கள்.

4. தன்னாளுகை - இலக்கியத்தை உளவியல், சமூகவியல், வரலாறு போன்ற பிற துறைகளின் ஆளுகைச் செல்வாக்குக்கு உட்படாத சுயாதீனமான தன்னாளுகை உடைய அமைப்பாகக் கருதுவது மற்றும் ஆசிரியனின் சொந்த வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சூழல் போன்றவற்றோடு தொடர்புறுத்தாமை.

ரஷ்ய உருவவாதத்தின் இணைவடிவமாகச் சொல்லப்படும் புது விமர்சனம் மேற்கில் 1950 களில் செல்வாக்கு அடைகிறது. உருவவாதத்தைப் போலவே இலக்கியப் படைப்பில் வடிவமும் உள்ளடக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் இரண்டையும் இணைத்தே இலக்கியப் படைப்பு ஆராயப்பட வேண்டும் என்பது புது விமர்சனவாதிகளின் அணுகுமுறை. படைப்பின் அர்த்தத்தை உருவாக்கும் கருவிகள் படைப்புக்குள்ளேயே இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். படைப்பின் அர்த்த உருவாக்கத்தில் ஆசிரியனின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழல், உளவியல் காரணிகள் போன்றவற்றை புது விமர்சனமும் நிராகரிக்கிறது. ஒரு படைப்பின் அர்த்தம் என்பது அதில் இயங்கக்கூடிய முரண்மெய்மை (Paradox), பலபொருள் தன்மை (ambiguity). படிமம் (Imagery), முரண் (irony) ஆகியவற்றில் இருந்து உருவாகிறது என்பது அவர்களுடைய பார்வை.

உருவவாதமும் புது விமர்சனமும் அப்போதைய பழமையான விமர்சன மற்றும் வாசிப்பு முறைகளுக்கு எதிரான கலகமாக உருவாகின்றன. அன்றைக்கு ஒரு படைப்பின் அர்த்தத்தை ஆசிரியரின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழலோடு தொடர்புறுத்தி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது முழுமையான வாசிப்புமுறை இல்லையென்பதால் இவ்விரு தரப்பாரும் படைப்பின் வடிவம் (Form), இலக்கிய நுட்பங்கள் (Poetic Devices) ஆகியவற்றை உள்ளடக்கிய அணுக்கவாசிப்பு முறையை முன் வைத்தார்கள்.

புது விமர்சனத்தில் க்ளீன்த் ப்ரூக்ஸ் (Cleanth Brooks) ஒரு முக்கியமான பெயர். விளக்கம் செய்வதாக இல்லாமல் தன்னியல்பானதாக கவிதை இருக்கவேண்டும் (The poem should not mean, but be) என்கிற கருத்தை முன்வைக்கிறார். அவருடைய பொழிப்புரையின் எதிர்க்கொள்கை (the heresy of paraphrase) என்கிற கருத்தாக்கத்தில் கவிதையின் அர்த்தத்தை உரைநடையில் சுருக்கித் தொகுத்து ஒரு கூற்றாகச் சொல்லி விளக்கிவிட முடியாதென்றும் கவிதைக்குள் இயங்கும் கவித்துவக் கருவிகள் கவிதையின் அர்த்தத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாதவை என்றும் கூறுகிறார். கவித்துவக் கருவிகளை விலக்கிவிட்டு கவிதையை ஒரு கூற்றாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது என்பது அவரது பார்வை.

இப்போது நாம் பேச வேண்டியது கவிதையில் அர்த்த உருவாக்கம் குறித்து. கவிதைக்கு அர்த்தம் தேவையில்லை என்று ப்ரூக்ஸ் சொல்வதாக நான் நினைக்கவில்லை, கவிதை அர்த்தமாக மட்டும் சுருக்கப்படாமல் அனுபவமாக நிகழவேண்டும் என்பதே அவர் சொல்வதின் சாரம் என்று புரிந்துகொள்கிறேன்.

தமிழ்ச்சூழலை எடுத்துக்கொண்டால் நவீன கவிதையின் புரிதல் குறித்த சர்ச்சை நீறு பூத்த நெருப்பாக எப்போதுமே இருக்கிற விஷயம். நாம், இங்கே பெரும்பாலும் கவிதை அளிக்கும் அனுபவம் என்பது, கவிதையின் அர்த்தத்தை முழுமையாக விளங்கி கவிதை நினைவில் ஒரு படிமமாக நிற்கவேண்டும் என்று விரும்புகிறோம். தமிழில் இரங்குகிற தன்மையுடைய (compassionate) கவிதைகள் உடனடிக் கவனத்தை அடைந்துவிடுகின்றன.

இந்தப் பின்புலத்தில் நாம் துரிஞ்சி தொகுப்பின் கவிதைகளை அணுகலாம். துரிஞ்சி தொகுப்பின் கவிதைகள் அணுக்க வாசிப்பையும் திரும்பத் திரும்ப மீள்வாசிப்பையும் கோருகின்றவையாக இருக்கின்றன. கவிதை வாசிப்பு மற்றும் கவிதையைப் புரிந்துகொள்ளுதல் சார்ந்த நம்முடைய மரபான பார்வையிலிருந்து இக்கவிதைகளை அணுகினால், நாம் எதிர்பார்க்கும் முழுமையான அர்த்த உருவாக்கத்திற்கு இக்கவிதைகள் எளிதாகப் பிடி கொடுப்பதில்லை.




இக்கவிதைகளை வாசிக்கும்போது உடனடியாகப் புலப்படுவது நம்முடைய தமிழ்க் கவிதைகளில் வழக்கமாக இருக்கும் ஈரத்தை உலர்த்தியும் நாடகீய மிகையை வடிகட்டியும் கவிதை எழுதப்பட்டிருக்கும் முறை. உமேஷின் பிற கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. இருப்பினும் இது, கவிதையைச் சொல்வதில் அவர் பிரக்ஞைப்பூர்வமாக தேர்ந்துகொண்ட அணுகுமுறையாகத் தெரிகிறது.

இக்கவிதைகளுக்குள் நம்முடைய அன்றாடத்தின் இருபரிமாணக் காட்சிகளை, கற்பனையின் வழியாக வேறொன்றாகக் காண்பது நிகழ்கிறது. வழக்கமான காட்சிகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுப்பதும், பழகிய அர்த்தத்தின் எதிர்முனையில் இருந்து விஷயங்களைக் காண்பதும், தற்செயல்கள் கூடும் கணங்களைக் கவிதைக்குள் பதிய வைப்பதும் நிகழ்கிறது உதாரணத்துக்கு எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன், நுணா போன்ற கவிதைகள்.

இக்கவிதைகளில் உள்ள நிலமும் வட்டாரமும் சார்ந்த ஒரு பிரத்யேக சொற்களஞ்சியம், வாசிக்கும்போது புதியதொரு மனநிலையைக் கொடுக்கிறது. தாவரங்கள், கொடிகள், பழங்கள், விதைகள், சிறுதானியங்கள் போன்ற பெயர்ச்சொற்கள் பெரும்பாலான கவிதைகளில் படிமமாகவோ உவமையாகவோ தொழிற்பட்டிருக்கின்றன. இவற்றில் எனக்குப் பலவற்றின் பெயர்கள் தெரியவில்லை. உதாரணத்துக்கு தடினிகாய், வரகந்தாள், நாதாளிப் பழம், சாராயப்பூ, துரிஞ்சி, பூளாப் பழம் என்று விதவிதமான பெயர்கள் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. இந்தச் சொற்களை வாசிக்கும்போது எத்தனை ஆயிரம் சொற்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.

இந்தக் கவிதைகளில் பெண் என்ற படிமம் முக்கியமானதாக வந்திருக்கிறது. பெண்ணாக இருப்பதின் வேறுபட்ட மனநிலைகளும் இயல்புகளும் கவிதைகளுக்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவில் இருக்கும் அகநெருக்கத்தைப் பேசும் கவிதைகளையும் பார்க்க முடிகிறது. தமிழ்க் கவிதைகளில் மிகுந்த வெளிப்படையாகப் பேசப்படுகிற காதலுணர்வு மற்றும் காமத்தைக் கொண்டாடுதல் போல் இல்லாமல் இந்தக் கவிதைகளில் அகநெருக்கம் அரூபமான உணர்வுத்தளத்தில் வைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் என்ற படிமத்தை முன்வைத்து கவிதைசொல்லி தன்னுணர்வு சார்ந்த அகவயமான விசாரணைகளை நிகழ்த்திக் கொள்வதையும் காண்கிறோம். உதாரணத்திற்கு அழிஞ்சி பழம், இரண்டாவது நாளில் சந்தித்தல், கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம், துரிஞ்சி, பனஞ்சேகாய், கொள்ளுக்கொடியில் ஆடும் காமம், வரகந்தாளுக்கு அடியில் இரண்டு காடை முட்டை போன்ற கவிதைகள்.

தொழில்நுட்ப உலகம் அளிக்கக்கூடிய புதிய படிமங்களும் அம்மாவைக் குறித்த நல்லதொரு சித்திரமும் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. சமகால அரசியல் நடப்புகளின் மீதான விமர்சனமும் கவிதைகளில் இருந்தாலும் உமேஷின் கவிதை சொல்லும் பாணியினால் அந்த விமர்சன எத்தனிப்பு உள்ளொடுங்கிய தொனியிலேயே இருக்கிறது. கொல்லப்பட்டவர்களுக்காக, உங்கள் நாக்கு பேசாத அரசியல், எல்லாமே மீகேலி படம்தான், உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை, எங்கள் பிரதமர் மிக நல்லவர், விடியும் போது வீட்டில் இருந்தால் போதும் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்

தொகுப்பில் எனக்குப் பிடித்தமான கவிதைகளாக அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல், பனஞ்சேகாய், உடல் மட்டும் தெரிகிற புலி, துரிஞ்சி, காகங்களின் கால்களால் நடப்பவர், கரம்பு, இரண்டாவது நாளில் சந்தித்தல் போன்றவற்றைச் சொல்வேன். இந்தக் கவிதைகளை எல்லாம் இணைத்தால் ஒரு கிராமியக் குடும்பத்தின் வாழ்க்கையை அசலாகச் சொல்லிவிடக்கூடிய சிறுகதை அல்லது நாவல் இருப்பதை உணரமுடிகிறது.

பல கவிதைகளில் வாசிப்பின்பம் குறைவாக இருக்கிறது. மேலும் மிக அதீதமான அகவயப் படிமங்களுக்குள் கவிதை சிக்குண்டு விடுவதால் எதையுமே பெற்றுக்கொள்ள முடியாத சிக்கலும் சமயங்களில் வாசகனுக்கு நேர்கிறது. இவை உமேஷின் கவிதைகளில் மேம்படுத்தவேண்டியவை. கவிதை எல்லாவற்றையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாசகனை உரையாடலிலில் இருந்து வெளியேற்றி விடாத பொறுப்பும் அதற்கு இருக்கிறது.

(23/11/25 அன்று நிகழ்ந்த திணைகள் விருது நிகழ்வில், விருதுபெற்ற துரிஞ்சி கவிதை நூல் குறித்த உரையின் திருத்திய மதிப்புரை வடிவம்)

நன்றி: தடாரி மின்னிதழ்- டிசம்பர் 2025