Dec 12, 2011

பயத்தின் சகடம்

பயத்தின் சகடம்
ஓயாது உருளும்
மனங்கொண்டவனின் வெளியில்
நம்பிக்கையின்மையின் பூதங்கள்
பசியோடு அலைந்து கொண்டிருந்தன

இரவின் துர்க்கனவுகளில்
விரியும் நிலத்தில்
ஓயாது பொழியும் வெயிலருந்தி
அடரும் நஞ்சொடு
நாகம் காத்துக்கொண்டேயிருந்தது அவனுக்காக

திசைகளின் கதவுகளை
இழுத்துப் பூட்டிக்கொண்டவன்
வெளியைச் சுருக்கி
கூரையாக்கிக் கொண்டவன்
பகலின் திரியில்
இருட்டை ஏற்றிக்கொண்டவன்
கதவிடுக்கு நூலாம்படையாய்
ஒளிய விழைபவன்

தாழா புழுக்கத்தில்
திசைகள் தகர்த்துப் பாய்ந்தான்

காலத்தின் ரசவாதம்-அவனைத்தான்
காவல் தெய்வமாக்கியது