நீ பேசவியலாத

நீ பேசவியலாத
சொற்களின் திரவமாய்
வழியுமிந்த கண்ணீரின்
இருமை கூடிய ஆழக்கசப்பு
நாவில் படர்கிறது

அதன் பெருந்துயரில்
நிகழ்கணம் நம்பிக்கையற்றதாக
ஊசலாடுகிறது

அதன் வெம்மை
என் சமநிலைக் கனிகளை
அழுக வைத்துக் கொண்டிருக்கிறது

கரைந்தொழுகும்
உன் முகமூடிகளின் துர்நாற்றமோ
சகிக்க முடியாததாகவிருக்கிறது

யாவற்றையும் விட
உன்னையொரு குழந்தையாய்
எதிர்கொண்டதின் அதிர்வை
இந்தப் புளிப்பேறிய மதுக்கோப்பை
உற்றுப் பார்ப்பதுதான் பயமாயிருக்கிறது.

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence