என் வீட்டிற்கு நான்கு சுவர்கள்
சில ஜன்னல்கள்
ஒரு கூரை மற்றும் கதவு
அதிலென் உறக்கமோ விருந்தாளியுடையது
வீட்டிற்கு தொலைவான பிரதேசங்களில்
இருளொளியிடையில் அலைகிறேன்
அங்கே ரோகிகளும் யாசகர்களும்
வேசைகளும் அனாதைகளும் இருக்கிறார்கள்
அவர்களுக்கு அன்பின் முத்தங்களை பகிர்பவன்
வீட்டிற்கு வெகு தொலைவானவன்
திரும்புகிறவனோ வீட்டிற்கேயான தனியன்
வெவ்வேறு வாசனைகொண்ட பருவங்களில்
வெவ்வெறு நிறங்கொண்ட நிலவெளிகளில்
தடயங்களை அரவத்தின் சட்டையென்று
உரித்து நகர்ந்துகொண்டிருக்கையில்
நேற்று வீட்டிற்கு மேலிருந்த
இன்று எனக்கு மேலிருக்கும்
நிலவின் வழியே
வெளியேயிருப்பதின் பயங்களை கடத்துகிறேன்
களங்கமற்ற நீதியின் புராதன சொரசொரப்பு
முதுகெங்கும் படரும் தண்டணைச்சவுக்கின் செவ்வரி
வேறுகண்டப் பறவையொன்றின் சிறகு
புளித்துவிட்ட காமத்தின் நுரைத்திரள்
கீழிருந்து மேலாகவும்
வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்ட
அறியாத மொழியின் கைப்பிரதி
ஆகாயத்தில் வேரும்
தரையில் கிளைகளும் பரப்பும் விதை
முடிதிருத்துபவளின் அக்குள் மணம்
நுண்ணிய கோடுகளாலான வரைபடங்கள்
திரும்பும் வழிநடையில் என்னென்னவே சேர்ந்தாலும்
ஒற்றையடித் தடம் முடியும் இடத்திலிருக்கும்
வீட்டின் மூன்றாம் படியிலிருந்து
உள்ளே தவழப்போவதொரு குழந்தைதான்
அள்ளி அணைக்க யாரேனும்
இருக்கும் இடத்தின் பெயரெல்லாம்
வீடென்று ஆகுக.
No comments:
Post a Comment