Oct 26, 2024

மணல் சொன்னது

பந்தல்படர்ந்த கொடியின்
வாசனைநிழல் விழுந்த
உன் வாசலின்
தாழடைத்த கதவின்முன்
நள்ளென் யாமத்தில்
நானலைந்திருந்தேன்
கோபுரவிளக்கைக் கண்சுமக்க
வந்துவிழுந்த நீரற்ற நதிக்கரையில்
வெறியில் மணலள்ளி
திசைகளில் இறைத்தேன்
விண்மினுங்கிய நட்சத்திரங்களின் கீழே
பாதரசக்குமிழிரண்டு கண்நீங்கின
இழந்துகொண்டிருப்பவனின் ஊமைக்குமுறல்
நாணற்சரசரப்பிடையே போயடைய
இருளிடையே புகைவெண்மை நிறந்த
நதிமணலின் உடலாழத்தில்
கனிந்திருந்த நீர்மம்தான்
சவமென்று கிடந்தவனுக்கு
அன்பெனும் உயிர்மத்தை
காத்துவைக்கும் ரகசியத்தை
போதித்து எழுப்பியது.

No comments: