Apr 13, 2015

அபத்தத்தின் இலைகள் பொன்னிறமாக ஒளிர்கின்றன

அபத்தத்தின்
சிறு தானிய மணியொன்றை
வழிப்போக்கிலிருந்த
பித்து மனதிடமிருந்து
யாசகமாகப் பெற்றேன்
என் இருதயத்தின் மலைச்சரிவொன்றில்
ஊன்றப்பட்ட அது
அடிவேர் பிடித்து வளர்ந்து
சிறுதளிராய்
இளங்கொம்பாய் மாறி
ஆளுயர மரமுமாகிவிட்டது
இராக்களில் அதன் பொன்னிற இலைகள்
சிறுகாற்றில் நடம்புரியும்போது
மெய்மையின் வெக்கை தாளாமல்
ஓடிவந்துவிட்ட எனக்கு அதுவளிப்பது
அபத்தத்தின் சிறுபுனைவு
அல்லதொரு மெல்லிய மயக்கம்
ஆம்!
அபத்தத்தின் இலைகள்
மலைச்சரிவின் இருளிடையே
பொன்னிறமாக ஒளிர்கின்றன
அவை தற்கொலையை மறக்கவைக்கும்
ஒருவித வாசனையை
இரவின் திசைவழிகளில் வெளியேற்றுகின்றன.
இப்படித்தான்
ஒவ்வொரு நாள் காலையிலும்
உயிரோடு கண்விழிக்கிறேன் நான்.

No comments: