Apr 13, 2015

ஏக்கப்புலி

நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழகிய மலராக
இருக்கிறது

நள்ளிரவில்
நடை சார்த்தப்பட்ட
ஆலயத்தின் முன்னால்
அது கடவுளைச் சபிக்கிறது
கூட்டம் நிரம்பி வழியும்
உணவகத்திற்கு முன்னால்
அது சட்டைப்பையை
வெகுநேரம் தடவிக்கொண்டு நிற்கிறது
பின்னிரவுகளில்
கழிவறையில் குந்திக்கொண்டு
நெஞ்சடைக்கும் ஒன்றை
வெளியேற்ற முயல்கிறது
அத்தனை மனிதர்கள் சூழ்ந்திருக்க
முன்னால் நடக்கும் பெண்ணின்
இடுப்பில் தொற்றிக்கொள்கிறது
இரத்தம் உறையத்துவங்கும்
துயர மரணத்தின் முன்னால்
வாழ்வை இறுகப்பற்றிக்கொள்கிறது.
நான் சாம்பலிருந்து
தசையை வடிப்பேன்
என்று உரத்துக் கூவிக்கொண்டு
மதுப்புட்டிக்குள் அலைவீசுகிறது
வெகு தனிமையில் கண்ணீரை மட்டும்
அருந்தும் சாதகபட்சியாகவும் இருக்கிறது

ஏக்கத்தின் பூரண தினமொன்றில்
நாம் வசிக்கும
ஊருக்குள் இறங்கும் பசித்த புலி
ஏக்கத்தின் பூரண மலரை கண்ணுற்று
திரும்பி கானகத்திற்கே
பறக்கிறது மெல்ல.

No comments: