பூக்கும் மலரின் கணிதம்

வெயில் கனலும் இளமதியத்தில்
வாசற்பந்தலின் நிழலெங்கும்
மல்லிகைகள் உதிர்கின்றன
வாழ்க்கையை விட்டத்திலிருந்து வீசியெறிந்து
மரித்துப்போன சகவுயிரின்
துர்மரண வீச்சம்
இன்னும் முற்றாகக் கழுவப்படாத வீட்டில்
ஆற்றாமையின் புகைமூட்டத்தில்
கனல்கிறது துயரம்
கூரையமர்ந்து கரையும்
காகத்தின் நிறத்திலிருந்து
கிரகண இருள் சூழும்
அத்தற்காலிகத்தின் கணங்களில்
வலியின் பெருங்கடல்
ஓயாது அலைவீசுகிறது
நிலமெங்கும் வேறுவீடுகளில்
யார் யாரோ எதனெதனாலோ
அகாலத்தில் மறைந்துவிடுகிறார்கள்
அவர்களுக்கும் சேர்த்தே துயரம் அனுசரிக்கும்
இந்தத் துர்நனவுக்காலத்தின்
விடியலில் விழியுயர்த்துகையில்
பந்தலெங்கும் புதிய மொக்குகள்
காண மறந்த கணத்தில்
ரகசியமாய் மலர்ந்துவிட்டிருக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence