நடுப்பகலில்

நடுப்பகலில் பனியைப் போல்
வெயில் பொழிகிறது
செய்வதற்கு ஏதுமற்ற எனக்கும்
வெயிலுக்குமிடையே
ஜன்னலின் இரும்புக்கம்பிகள்
எப்போதுமான மோனத்திலிருக்கின்றன
வியர்வையில் வழியும்
மின்விசிறியை நிறுத்தியபின்னும்
சுழலும் முனகலோசைக்கு
அறையைத் திறந்து ஓடிவிடலாமென்றால்
வெயில் பூட்டிவிட்ட கதவை
திறப்பதற்கு யாருமில்லை
ஜன்னலின் இடைவெளிகளின் வழி
காலைகளின் ஈரத்தையும்
மாலைகளின் அமைதியையும் கற்பித்து
நான் தணிகையில்
வெயிலின் உடலின் மீது
ஒரு தட்டான் வந்தமரும் இடத்தில்
பெருகிய குளத்தைக்
கடக்கும் சிறுகாற்று
திறந்துவிட்டுப்போகும் அறைக்கதவை
நான் ஏன்
உட்தாழ் இடுகிறேன்
இப் பொழுது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence