Apr 13, 2015

நடுப்பகலில்

நடுப்பகலில் பனியைப் போல்
வெயில் பொழிகிறது
செய்வதற்கு ஏதுமற்ற எனக்கும்
வெயிலுக்குமிடையே
ஜன்னலின் இரும்புக்கம்பிகள்
எப்போதுமான மோனத்திலிருக்கின்றன
வியர்வையில் வழியும்
மின்விசிறியை நிறுத்தியபின்னும்
சுழலும் முனகலோசைக்கு
அறையைத் திறந்து ஓடிவிடலாமென்றால்
வெயில் பூட்டிவிட்ட கதவை
திறப்பதற்கு யாருமில்லை
ஜன்னலின் இடைவெளிகளின் வழி
காலைகளின் ஈரத்தையும்
மாலைகளின் அமைதியையும் கற்பித்து
நான் தணிகையில்
வெயிலின் உடலின் மீது
ஒரு தட்டான் வந்தமரும் இடத்தில்
பெருகிய குளத்தைக்
கடக்கும் சிறுகாற்று
திறந்துவிட்டுப்போகும் அறைக்கதவை
நான் ஏன்
உட்தாழ் இடுகிறேன்
இப் பொழுது?

No comments: