மழைநாளில் நினைவுகள்
தீப்பற்றி எரிகின்றன.
கருமேகங்கள் நெய் வார்க்க
கொழுந்து விட்டெரியும்
அவை அழியாமல்
புடம் கொள்கின்றன
சாம்பலாய் உதிர்ந்து
காற்றில் பறந்து
கலைந்துவிடுமென்றால்
விடுதலையென்று சொல்லிவிடலாம்
அப்போது இருதயம்
சுமைகள் களைந்து
மலரைப்போல் மெல்லியதாகிவிடும்
ஆனால் எரிந்தெரிந்து
பசுமை நிலமாகும்
நினைவுகளை
செய்வதற்கு ஒன்றுமில்லை
மேலும் அதற்கு கருணையுமில்லை
காலத்தின்
தேர்ந்தெடுத்த கணங்களால்
செய்யப்பட்ட நினைவின் ஆயுதம்
தன் கூர்மையால் வதைக்கின்றது
எப்போதும் இறந்தகாலத்தில்
வாழுமொரு உயிருக்கு
எரியும் நினைவுகளே
நிகழ்காலமாக இருக்க
நினைவுகள்
தீப்பற்றி
எரிகின்றன
மழைநாளில்.
No comments:
Post a Comment