இச்சை என்பது
ஆரத்தழுவ யாருமின்றி
இரண்டு கரங்களையும் விரித்திருத்தல்
இலையுதிர் மரத்தடியில்
நிழல் தேடுதல்
ஏதாவது நிகழுமென்று நம்புதல்
சந்தடிமிக்க நகரவீதிகளில்
பெருமெளனத்தோடு அலைதல்
எரிந்து உயிர்த்தல்
நாவு வெளிநீண்டு
கழுத்தை இறுக்குதல்
பித்தான சொற்கள்
சிலவற்றை மொழிதல்
நினைவில் அவமானத்தை தேக்குதல்
கடவுளின் நாற்காலியில்
அமர்ந்துவிட விரும்புதல்
சிலவற்றை உள்ளிடுதல்
சிலவற்றை வெளியேற்றுதல்
தன்னின் வெற்றிடத்தில் அலைந்து
தன்னோடு சமரிடுதல்
ஒரு கனியின் சாறென
பிரபஞ்சத்தை வடிக்க முற்படுதல்
தனக்கு மரணமில்லை என்று நம்புதல்
ஆண் மார்க்காம்பில்
பால் சுரக்குமென்று சொல்லுதல்
மேலும்
இச்சை என்பது
கண்ணீரின் கனம் தாங்காது
தன் கழுத்தை அறுத்து
தன் கையில் வைத்துக்கொள்ளல்.
No comments:
Post a Comment