வெண்ணிற இரவில்

எனது தந்தையார்
நானொரு பைத்தியகாரனாய்
அலைவது பற்றி துயருற்றவராய்
எனக்கொரு காதலி
இல்லையென்று புலம்பிக்கொண்டிருக்கிறார்
என்னின் கபடமற்ற புன்னகைகள்
தன் பழைய காதலிகளை
நினைவூட்டுவதாலும்
நிதம்பங்களின் மீதான அலட்சியம்
தனக்கு விடப்பட்ட சவாலாயிருப்பதாலும்
எப்போதும் பசுமை மறையாத
தன் விளைநிலத்தில்
நான் களர்மண்ணை கொட்டிக்கொண்டிருப்பதாக
உரக்கக்கூறியவாறே அலைகிறார்
நானோ அன்னையர் தெருவில்
என் தந்தையின்
முன்னைக்காதலிகள்
உதிர்த்த முதுநரைக் கூந்தலில்
கருமை மிகுந்த காலங்களை
தேடிக்கொண்டு
வெண்ணிற இரவில் திரிகிறேன்
தந்தையும் நானும்
எதிர்கொள்ளும் நிசியில்
எமது கரு நிழல்களிலிருந்து
அன்னையரும் காதலிகளும்
உரக்கச் சிரிக்க
வெகு அமைதியாய்
எமது நிழல்கள் விலகிக்கொள்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence