Apr 13, 2015

அன்னவாசல்

பாறைகளாகிவிட்ட ஹிருதயங்களின் நிலத்தில்
காலங்களின் நிமித்திகன்
முதலில் உணரக்கொடுத்தது
யுகங்களிடையே நீளும்
ஊசி முனையளவு சுரங்கத்தின்
தரையிலிருந்து
எழும்பும் கங்குப் பெருமூச்சுகளை

புணர்ந்த நிலையில்
பாறைகளாகி விட்டவர்களின்
இறுதிக்கலவி குறிப்புகளை
அவன் காற்றில் வரைய
விரியும் கல்யோனியில்
மயங்கித் துலங்குவது
நிரப்பவியலா கோப்பை

மரணத்தின் தைலவண்ன ஓவியத்தில்
தலைகீழாய் அலையடிக்குமொரு குளம்-
கிளிக்குஞ்சுகளின் கார்வை-
நெளிந்து வலம்போகும் சர்ப்பம்-
மற்றுமொரு நண்டிலிருந்து
முடிவுறா பாழில் எதிரொலிக்கும்
மண்ணின் குமுறல்களை
மொழிபெயர்த்தவனிடம்
இந்த மலை
நிமித்திகங்கள் சொல்லி மரித்த
முதுபல்லியின் சவமாகிறதென்றேன்

ஏககணத்தில் நிகழ்கிறது
அவன் புன்சிரிப்பும்
பல்லியின் ஒரு அசைவும்.

No comments: