Oct 20, 2024

கடவுளை வரைபவன்

விசேஷ நாட்களில்
ஆலய வாசலில்
பிச்சைக்காரர்களின் கோடியில்
மரபோர்டில்
பொருத்தப்பட்ட கேன்வாஸ்களோடு
காத்திருக்கிறான்
கடவுளை வரைபவன்

வேண்டுமென்று
அடம்பிடிக்கும் குழந்தையின் தீவிரத்தோடு
நின்றிருக்கும் பக்தர்களுக்கு
விரைவான கோடுகளில்
வரைந்து சுருட்டி நீட்டுகிறான்

தம்முகத்தின் சாயல்
அதிலிருப்பது கூட அறியாமல்
பவ்யம் கொண்டு
தாங்கிப்போகும்
பக்தர்கள் கண்டு
கருவறை அதிராமல்
குலுங்கிச் சிரிக்கிறான்
கடவுள்

அவன் சிரிப்பை
தன் கோடுகளில்
தோய்த்துக்கொண்டிருக்கிறான்

கடவுளை வரைபவன்

No comments: