Oct 20, 2024

கடவுளோடு பேசுகிறவன்

கீற்றுகளிடை வெளவாலாய்
சாத்தான் தொங்கும்
ஒலைக்குடிசையில் வசிக்கிறான்
கடவுளோடு பேசுகிறவன்

உச்சிவேளையில் கடைசியாய்
ஒரு கோட்டை கள்ளருந்திவிட்டு
உறங்கப்போகும்
அவன் பகற்பொழுதுகள் கனவுகளற்றவை

அந்திவிழுந்த பின்னால்
குளிர்நீராடி நீறுதரித்து
முழங்கத் துவங்குகிறான்
கடவுளை அழைக்கும் இசையை

விண்ணப்பங்கள்
வேண்டுகோள்கள்
முறையிடல்கள்
நேர்த்திக்கடன்கள்

உக்கிரமிகுந்த பகலாய்
கடந்து முடியும்
முன்னிரவிற்குபின்
சாத்தானும் அவனும் தனியமர்கின்றனர்
கள் நிரம்பிய பானையோடு

தான் புகமுடியா
புலத்திற்கு வெளியே
தலைகீழாய் தொங்குகிறான்

கடவுள்.

No comments: