Oct 20, 2024

கதவு

பாவனைகளிலேனும்
மகிழ்வை நிரப்பவியலாமல்
தாழ்நீக்கும் ஓசைமுன்
துயரங்களோடே நிற்கிறேன்

உதிர்ந்துகிடக்கும்
பறவைகளின் இறகு
அலையொதுக்கிய கிளிஞ்சல்கள்
மழை மறுநாளின்
மொட்டு பாப்பாத்திகளென
எதையேனும் எடுத்துவரும்
சிறுவனின் நேர்மையுமில்லை

இருந்தாலும்
உன் அன்பின் நதிமுகம்
இருதுளி கண்ணீருக்குப்பின்னால்
கரைகளற்று பொங்குகிறது

இயல்பு திரும்பிவிட்ட நாளில்
உறக்கத்தில் மிளிரும்
உன் புன்னகையை காணுமிரவில் மட்டும்
அரவமின்றி - இந்தப்
பூனை வெளியேறும் காரணம்
வெளியும் அறியாதது

ஒருக்களித்து சாத்தியிருக்கும் கதவு
காத்திருக்கத் துவங்குகிறது
பூட்டப்படுவதற்கும்
தட்டப்படுவதற்கும்.

No comments: