Oct 20, 2024

மதுவின் சிறகுகள்

சலனமற்ற கரும்பாறையாய்
உறைந்த இவ்விரவில்
விளிம்பில் நுரைத்திருக்கும்
மதுக்கோப்பைக்குள்
மிதக்கும் கடலை
ஓர் உன்னதத் துய்ப்பாளனாய்
விழுங்குகிறேன்

சூடேறும் செவிநுனிகளைக் கிழித்தவாறு
கிளம்பிப் பறக்கின்றன
ஓராயிரம் பறவைகள்

கடைசித் துளியையும்
கடந்த கணத்தில்
விரிந்த வெளியில்-அவையென்னை
வீசி விளையாடுகையில்
முடிவிலா தரிசனங்களை
கண்டு மயங்கியவனுக்கு
விடியலில் மிச்சமிருந்தவை
உதிரிசிறகுகளின் வெண்புன்னகைககள் மட்டுமே.

No comments: