Oct 20, 2024

நினைவில் காடுள்ளவன்

அந்தியின் கண்கள்
மஞ்சள் ஒளியை
தும்பைப் பூக்களில் வந்தமரும்
வண்ணத்துப்பூச்சிகளின் மேல்
வரைகின்ற மாலையில்
தன் காணியில் திரிகிறான்
தவணைகளில் ஊர் வருகிறவன்

தேகம் நனைத்துக் கடக்கிறது
தென்னை இடையூறிய காற்று

ஆடுகள் மேயும்
அரவம் மேய்ந்தவன்
நெருஞ்சி பூத்த வரப்பில்
நினைவழிந்து நடக்கிறான்

குத்திய தாரைகளில்
இதமாய் ஏறுகிறது புழுதிச்சூடு

சுருண்டு வரும் சூலைக்காற்றோ
சருகுகளை சொருகிக்கடக்கிறது.

அரைப்பனை உயரத்தில்
சிறுநிலவு கிடக்க
கவியும் இருளில்
கிறங்குகிறது கானகம்

கட்டித்தாரை சொக்கப்பனையில்
பூச்சிகளும் தெனேசும்
விழுந்து பொரிய
சுடுகொண்டு சுகம் கொள்கின்றன
ஆநிரைகள்

கொக்குகள் வடக்கே போய்விட
பூத்துக்குலுங்கி சாளை திரும்பும்
நினைவில் காடுள்ளவன்
நாளை பெருநகரத்தில்
உங்களைக் உரசிக் கடப்பான்.

No comments: