கானலை உமிழும் பாலையில்
நீ பின்னுமுன்
பாடலை இசைத்துக்கொண்டிருந்தாய்
அது
குளிர்மை பற்றியன்றி
கானலின் வெம்மை பற்றியதாகவிருந்தது
இன்னுமெனக்கு பெருமகிழ்ச்சி
வெயிலின் தேவதைகள்
புகை வடிவில்
உன் பாடலை
ஆலிங்கனம் செய்ய
இன்னும் மெருகேறித் ததும்புகிறது
உன் குரல்
கள்வெறியில்
கானலை இறைத்தாடுமென்
துணுக்குறலெல்லாம்
நாம் கடந்துவிட்டபின்
கிழக்கிருக்கும்
இப்பகல் நிலவின்
முன்னிரவு பற்றிய துயரங்களே.
No comments:
Post a Comment