கார்மன் கோட்டுக்(karman line) கவிதைகள்-மண்புழுவின் நான்காவது இதயம்
புறவெளி யதார்த்தமும் மெய்நிகர் வெளியும் ஒன்றுடன் ஒன்று குலைத்துப் போடப்பட்ட காலம் நம்முடையது. பயணங்களும் உலகின் வெவ்வேறு திசைகளிலுள்ள மனிதர்களுக்கிடையேயான தகவல் தொடர்பும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு(அதற்கான விலையோடு) எளிமைப்பட்டிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது அறிவு மற்றும் கலைத்துறைகளில் ஏற்கனவே நிறுவப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து விலகி exotic தன்மையுடைய புதிய சமூகவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. கலாச்சாரங்களும் பண்பாடுகளும் தங்களுக்குள் முயங்குகின்றன. இந்த சமூகவெளியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய திசைச்சொற்கள், காட்சிப்படிமங்கள், குறியீடுகள் போன்றவற்றை தன்னுடைய வடிவங்களில் வினைபுரிய அனுமதிப்பதின் மூலம் மொழியும் இந்தச் சூழலை கிரகித்துக்கொள்கிறது.