எட்டாவது கன்னி
மே கமற்ற நீலவானத்தின் உச்சியில் சூரியன் தகிக்கையில் தெற்கே நீளும் தடத்தில் அவர்கள் வந்தார்கள். புளியமரத்தடியில் படுத்திருந்த செம்மி நாயும் கறுப்பு நாயும் எழுந்து குலைக்க முன்னால் வந்த மூத்தவனின் அதட்டலுக்கு குரைப்புகள் மெல்ல அடங்கின. கவையைப்போல் முக்கில் தடம் இரண்டாக பிரிய மேற்கில் குறுகிய வீதியும் கிழக்கில் பெரிய வீதியும் நீண்டன. நிதானித்த மூத்தவன் தலைச்சுமையை சமனாக்கியவாறு கிழக்குப்பக்க வீதியில் நடந்தான். பின்னால் வந்தவன் சும்மாடு கூட்டி பெரிய சாக்குப்பையை வைத்திருந்தான். இடுப்பில் குழந்தையோடு கடைசியாக நடந்தவளின் தலையில் துணிமூட்டை இருந்தது.