Posts

Showing posts from December, 2011

கண் நரம்புகளில் விரியும் புலியின் கோடுகள்-புயனஸ் ஏரிஸில் மூன்று நாட்கள்

தென்னமரிக்காவில் உள்ள உருகுவேயின் தலைநகரான மாண்டிவீடியோவில் பணி புரிய நான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டபோது இரண்டு காரணங்களுக்காக அதை பயன்படுத்திக்கொண்டேன்.ஒன்று,லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் வாசித்திருந்த நிலப்பரப்பு மற்றும் அதன் மனிதர்களை காண்பதற்கான வாய்ப்பாகவும், இரண்டாவது போர்ஹேஸ் பிறந்து வாழ்ந்த அர்ஜெண்டினாவின் தலைநகரான புயனஸ் ஏரிஸ் செல்வதற்கானதாகவும். கிளம்புவதற்கு முன் என்னுடைய பயணத்திட்டத்தில் புயனஸ் ஏரிஸ் மற்றும் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ இரண்டு நகரங்களும் பிரதானமாக இருந்தன.முடிந்தால் மரியோ வர்கஸ் லோசாவின் பெருவும்.

பயத்தின் சகடம்

பயத்தின் சகடம் ஓயாது உருளும் மனங்கொண்டவனின் வெளியில் நம்பிக்கையின்மையின் பூதங்கள் பசியோடு அலைந்து கொண்டிருந்தன இரவின் துர்க்கனவுகளில் விரியும் நிலத்தில் ஓயாது பொழியும் வெயிலருந்தி அடரும் நஞ்சொடு நாகம் காத்துக்கொண்டேயிருந்தது அவனுக்காக திசைகளின் கதவுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டவன் வெளியைச் சுருக்கி கூரையாக்கிக் கொண்டவன் பகலின் திரியில் இருட்டை ஏற்றிக்கொண்டவன் கதவிடுக்கு நூலாம்படையாய் ஒளிய விழைபவன் தாழா புழுக்கத்தில் திசைகள் தகர்த்துப் பாய்ந்தான் காலத்தின் ரசவாதம்-அவனைத்தான் காவல் தெய்வமாக்கியது

வனத்தின் இடையே

வனத்தின் இடையே-தன் வாழ்வின் துக்கத்தை இசைத்துப் போகிறதொரு பறவை பட்டுப்போன மரங்களின் மொட்டைக் கிளைகளில் நெளிகிறது வெயில் சருகுகள் நொறுங்குகின்றன அரவத்தின் ஊர்தலுக்கு கண்கள் பூத்துப்போயின பச்சையாயொரு தளிர் தேடி ஓடை ஓடிய தாரைகளில் ஒளிர்கின்றன கூழாங்கற்கள் நீலவானில் கலைகிறதொரு வெள்ளை மேகம்

வினோதக்கதைகளின் வெற்றிவாகை சூடிய உயிர்த்தெழல்

- இடாலோ கால்வினோ தொகுத்த "Fantastic Tales" என்ற தொகுப்பிற்கு அவர் அளித்த முன்னுரைக்கான மொழிபெயர்ப்பு வினோதக் கதைகள் பதினெட்டாம் நூற்றாண்டு கதைவிவரிப்பின் மிகுந்த பண்புநலன் மிக்க விளைபொருட்களில் ஒன்றாகும்।நமக்கு,இது மிகவும் குறிப்பிடத்தகுந்தவையில் ஒன்று. ஏனெனில் இது அதிகமாக தனிமனிதத்தின் அகவாழ்வையும் அதன் திரண்ட குறியீடுகளைப் பற்றியும் நமக்குச் சொல்லும் இலக்கிய வகையாகும்.இன்றைக்கு அது நம் நுண்ணுணர்வுகளோடு தொடர்புடையாதாகையில் இக்கதைகளின் இருதயத்திலிருக்கும் அதிஇயற்கை(supernatural) நமது அறிவார்ந்த கவனத்திலிருந்து தொலைவாகிவிட்ட சுய நினைவிழந்தவர்களின்,அடக்கப்பட்டவர்களின் மற்றும் மறக்கப்பட்டவர்களின் கலகத்தைப் போல் எப்போதும் அர்த்தத்தைச் சுமந்திருப்பதாகவே தோற்றமளிக்கிறது.இதில் வினோதத்தின் நவீன பரிமாணத்தை, நமது காலத்தில் அதன் வெற்றிவாகை சூடிய உயிர்தெழுதலிதலின் காரணங்களைக் காண்கிறோம்.

சிற்றோடைக்குள்

சிற்றோடைக்குள் உறைந்தவொரு கூழாங்கல் கரைகளற்ற வானில் ஒற்றையாய் மினுக்கும் பின்னிரவு நட்சத்திரம் இசை முடிந்த பொழுதில் மெலிதாய் துவங்கும் பேரமைதியின் கீற்றிசை இரவின் முதல் பனித்துளி கொள்ளும் பச்சையம் மலைமுகட்டு ஒற்றைப்பூவை கழுவிப்போகும் காற்று உன் அன்பின் சாரலோ பிரபஞ்ச தாய்மையோடு என்னில் பொழிகிறது.

நான்கு கவிதைகள்

1) ஒரு கனவைப்போல் காலம் நம் நினைவுகளிலிருந்து தப்புகிறது ஏறுவெயிலிடை பனித்துளி போலவும்.. கடந்தவை எதிர் இரண்டுக்குமிடையே நுரைத்தெழும்புகிறது வாழ்வின் மீதான பெருவிருப்பு யுகங்களை ஊடுருவிக்கடக்கும் தாபம் அரூப வெளியில் இறைஞ்சுதலாய் அலையத்துவங்குகிறது விகிதக்கணக்குகள் வேறுபடத் துவங்குகையில் பயம் மருவைப்போல் திரள்கிறது. கேள்விக்குறியின் சுழி கழுத்தில் முயற்கண்ணியாகிறது. ஒவ்வொரு இரவிலும் நம் உறக்கத்தின் ஆழம் குறையத்துவங்குகிறது. பிறகு நாம் வாள் உயர்த்துகிறோம் அத்தனை பயத்தோடு.. 2) ஒரு துரோகத்தை கொஞ்சம் பயத்தோடுதான் துவக்க வேண்டியிருக்கிறது உருப்பெறுகையில் பயம் பாதியாகிறது செழித்த பின் சாதரணமாகிறது. பின்னதுவொரு உறுத்தாத கரும்புள்ளியாகிறது மச்சத்தை போல. 3) முறியும் கிளையில் மலர்ந்திருக்கும் பூக்கள் தேனீருக்கு காசில்லாத மழை நாள் முகம் பதியவைத்துக்கொள்ளுமுன் கடந்துவிடும் பேரழகிகள் தாயற்ற சிசுவுக்கான இரவல் தாலாட்டு வாய்த்தும் நிறைவிலா புணர்ச்சி போதாமைகளின் இடையில் புன்னகைக்கிறார் நம் கடவுள் 4 ) பூவனத்தில் வாழ்கிறாள் சூனியக்காரி ஆதியிருள் மீத்திருக்கும் குகையிருக்கிறாள் தேவதை. யாரேனும் ...

சுடுபகல்

சுடுபகல் கொடும்பாலை காற்றலையும் கானகம் கடக்கையில் நீர்க்கண்ணுறங்கும் புற்றிலிருந்து பெரு நாகம் படங்கொண்டது. நிலம் நிதம்பமாய் பிளவுற வெக்கை மேகங்கள் ஸ்தனங்களாய் திரண்டன. பெட்டையும் சிட்டும் புன்சிரிப்பை கிளைவிட்டு பறக்க வாய்விரித்து கொக்கானி காட்டுகிறது ஓணான் தீராக்காமம் உமிழாயும் கண்ணீராயும் வழிய வேலியோரக் கள்ளிச்செடியின் மீது நஞ்செறிந்து நடந்தான். வேர் செத்த கணத்தில் பெட்டையும் சிட்டும் கள்ளி மீது வந்தமர குளிர் திரும்பும் கானகத்திற்கு அவன் திரும்ப வரப்போவதில்லை

மூன்று கவிதைகள்

1) இருளெடுத்து வெட்கம் துடைக்கிறது தாபம். உடைகள் உதிர்த்த நிர்வாணம் பாலின் வாசனை கொள்கிறது. ஆயிரமாயிரம் வேர்கள் மேனிப்பெரு நிலத்தை துளைத்துயிர்க்கின்றன. முத்தங்களில் மிச்சமாகும் எச்சில் தசையின் சுவை கூட்டுகிறது. காமத்தின் நுரைக்குமிழ்கள் கற்பாறைகளாக பரஸ்பரம் தேகங்கள் மதுக்குப்பிகளாகின்றன. அணுக்கள் கடத்தும் நரம்புகளின் ஆகக்கூடிய மென்மையை கண்ணீர் நரம்புகள் எய்துகின்றன. 2) பேரன்பு கொண்டவன் நான் என்னைக் கடக்கும் இவளிடம் இந்த நாயிடம் அந்த பிச்சைக்காரனிடம் உரத்துச் சிரிக்கும் தெருமுனை சித்தனிடம் என்னைத் தொந்தரவுபடுத்தாத எதனிடமும். 3) உன் முலைபிளவுக்குள் முகம்பதித்து அழுகை தணிக்கத் துடிக்கும் குழந்தைதான் நான் துளிக்காமம் தடுக்கிறது

இரண்டு கவிதைகள்

1) யாருமற்ற தனிமையில் ஆடை நெகிழ்வின் பிரக்ஞையற்ற பெண்னென குளம் கிரணங்கள் தீண்டிய வெடவெடப்பில் தாமரைகள் சலிப்பற்ற சந்தோஷத்தில் கும்மாளமிடும் மீன்கள் நீருண்ட நன்றிக்கு பூவுதிர்க்கும் மரம் மேகங்களில் மின்னுகிறது உன் முகம் 2) கடவுள் வந்திறங்கும் பூசாரியின் தேகமென உடல் விதிர்க்கின்றது உன் பார்வைகளின் தீண்டலில் யாக்கை கொதிக்கும் இவ்வெக்கையை கொடுத்துவிட்டு பனிமலையென நீயிருக்கிறாய் இரைவெறியில் அலையும் காதல் மனசு ஊசிமுனையில் ஊழித்தாண்டவம் நிகழ்த்துகிறது. உனக்கெப்படி வாய்த்தது நானருந்தும் நீரையும் கள்ளாய் மாற்றும் ரசவாதம்?

ஊரில் ஒருவன்

உருண்டு விளையாடிய தெருவும் புழுதியும் காணக் கிடைக்கவில்லை கண்களை நெருடுகிறது கான்கீரிட் தெருக்கள் நெடிய மரபைக் கொன்று எழுந்து கொண்டிருக்கின்றன வீடுகளைச் சுற்றி புதிதாய் சுற்றுச்சுவர்கள் ஆண்கள் யாரும் வெற்று மார்போடு தெருவில் நடப்பதில்லை வடகமிட்ட வாசல்களில் வெய்யில் காய்கிறது விரிந்த காடுகளில் சிறார்கள் பொன்வண்டு பிடிப்பதில்லை பட்டாம்பூச்சிகள் பிடித்து விடுவதில்லை அகரம் கற்ற பள்ளி வெளவால்களின் வசிப்பிடமாய் திருவிழாக்களுக்கு நடனமாட திரைத்தாரைகைகள் வருகிறார்கள் குப்பைகளில் கிடக்கின்றன வாராந்தரிகளில் விளம்பரத்தப்படும் ஆணுறைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறான் கருப்பராயன்.

அகதியின் கவிதை

பச்சையம் நிறைந்த தென்னிலைகள் ஆடும் பழங்குடியினர் நடனமொத்து. உற்சாகம் பூசிக்கொள்ளும் காற்று மரங்கள் மாறித்தாவும் காற்று வெளியில் ஓவியங்கள் வரைந்தபடி பூக்கள் உதிரும் சிறுதூரம் கடக்க வால் தூக்கி வேகமெடுத்தோடும் அணில்கள் கண்ணாடிக்கயிறாய் நீர் வாய்க்கால் நனையும் உள்ளங்காலில் நதிக்குளிர்மை வேலி மீதமர்ந்து மழையறிவிப்பு செய்யும் செம்போத்துகள் தனிமைகளில் அத்தளிருதடுகள் கொடுத்த பூப்பு வாசம் அகலாதிருந்த முத்தங்கள் இருளடர்ந்த நகரத்து சந்தொன்றில் மனசில் நுரைதள்ள பொசிந்து கொண்டிருக்கிறேன் சிறு நீரும் கண்ணீரும்

எரி நட்சத்திரம்

பெருஞ்சோறு தின்று கொடும்புகை இழுத்து முயங்கி முயங்கி மதுவருந்தி சிறுகொடியிடை மாதர் பெருமுலை பார்த்து கிறுக்கலாய் கவிதைகளெழுதி நாற்றம் பூத்த உடலில் சுகங்கள் கீறி வானம் பார்த்து கனவுகள் நெய்து உதட்டுச்சிரிப்போடு உள்ளழுது கழியும் இவ்விளமை எரிந்து வீழுமொரு நட்சத்திரமன்றி வேறென்ன?

கதை

வண்ண சித்திரப்படங்கள் நிறைந்த புத்தகம் காட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தேன் குழந்தைக்கு அவள் கண்வெளியில் கதையொரு உலகமாய் விரிகையில் பாத்திரங்களின் பெயர்களுக்கு பழகி விட்டிருந்தாள் பக்கங்கள் புரள கதையின் உயிர்ச்சரடை பிடித்துவிட்டவள் வெகு எளிதில் திறந்தாள் யூகங்களின் கதவுகளை உச்சமாய் தன்னையும் என்னையும் கதாபாத்திரங்களாய் நுழைத்தாள் உக்கிர வாள்சண்டையில் கொடிய தானியேல் என் கரங்களை வெட்டுகையில் பயத்தில் அழத்துவங்கியவளை தேற்ற வெளிவர வேண்டியதாயிற்று இருவரும் அவள் உறங்கிவிட்ட பின் கதைக்குள் நுழைந்தவன் வாளை பொறுக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினேன் தானியேலை தேடி

கள்ளன்

தோட்டத்தின் மேற்கு வேலியிலிருந்த கடவைத் திறந்துகொண்டு அவன் திரும்புகையில் மணி எட்டரை இருக்கும்.இன்னும் லேசாக மூடுபனி இருந்தது.களை வெட்டக் கொத்து கேட்டிருந்த வடக்கால மச்சானிடம் போய்க் கொடுத்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தான்.வாயில் குடித்த திருட்டுப்பீடி மெலிதாக நாறியது. மேகோட்டு வேலியை ஒட்டியே நடந்தான்.தோட்டத்தில் எந்த மூலையில் எத்தனை வேப்பங்கன்றுகள் எத்தனை மரங்கள் என்பது கரதல பாடம்.ஆளுயரம் வளர்ந்திருந்த ஒரு கொம்பிலிருந்து பற்குச்சி முறித்து மென்றுகொண்டே வரப்பில் நடந்தான்.செருப்பிலும் பாதத்திலும் பனியும் மண்ணும் கலந்து ஒருவிதமான குளிர்ச்சி பரவியிருந்தது.

கார்ப்பரேட்

இப்போது அவன் அடைந்திருக்கும் இடத்தைப் பற்றிய ஆச்சரியம் கரையாமல் இருக்கின்றது.ஒரு வகையில் பெரிய பிரயத்தனங்கள் எதுவுமின்றியே இவ்வளவு தூரம் வரமுடிந்ததற்கு தான் மட்டுமே காரணமில்லையென்பதை உணர்ந்திருப்பதால் எப்போதும் ஒருவகையான பயமும் குழப்பமும் உள்ளே இருக்கின்றன.

மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம்

குளிரிரவுகளில் ஊர் எழுமணிக்கே அடங்கிவிடுகிறது.சுண்ணாம்பு பூசப்பட்ட காரைச்சுவர்களுக்கு வெளியே கசியும் மின்விளக்கொளி மெளன ரகசியமாய் இருளின் வெளியில் ததும்புகிறது.மேகாற்று வீசும் கூதற்காலத்தில் ஊரடிப் புளியமரங்களின் உச்சிக்கிளைகள் பேயாட்டம் போடுகையில் ஊரொட்டி கிழக்கே நீளும் இட்டேரித்தடத்தில் நடப்பவன் பொருத்தும் சிகரெட்டின் நுனி செங்கொழுந்தாய் தடத்தில் மின்னுகிறது. பொடி ஓடைக்கற்கள் நிறைந்த நீர் அரித்த இட்டேரி.எடுத்து வைக்கும் அடிக்கு பொடிக்கற்கள் நொறுங்கும் சப்தம் நடைக்கு வழித்துணை.மாதாசிங்கன் கோவிலடியில் அரை பர்லாங் தூரத்திற்கு இட்டேரி மணலாக விரிந்துகிடக்கிறது.பகலின் சூடு இறங்கிவிட்ட மணலில் அமர்ந்தபோது வெகு குளுமையாக இருந்தது.

குளம்படி நிலம்

உதித்தெழும் சூரியனைத் தொழுது மேழிபிடிக்கும் காணியாளர்களின் கலப்பை கீறும் படைக்கால் முடிவுறாமல் யுகங்களிடையே நீள்வது.ஈரம் மலர்ந்த நிலத்தில் செம்மறிகளின் காய்ந்த சிறுபுழுக்கைகள் இளகி மென்கவிச்சி வீச,கொழு கிளறும் பிரபஞ்சத்தின் மீப்பெரும் பாதையில் மறிகள் அவனுக்கு முன்னால் நடந்தவை.

கர்ண மகராசா

அ ம்மா என்னை ஏழை மனசுக்காரன் என்று சொல்வாள் சார்.அவளால் கேனயன்,இளிச்சவாயன் என்று மற்றவர்கள் சொல்வதுபோல் சொல்ல முடியாததால் பதமான வார்த்தையில் சொல்லியிருப்பாளாக்கும்.யாரோ ஒருவர் என்னை "வெள்ளைச்சோளம்" என்று கூட சொல்லியிருக்கிறார்.

அந்தர நதி

ப த்து மணிக்கும் மிச்சமிருந்த பனி ஏறுவெயிலின் விளிம்புகளிடையே படர்ந்திருந்தது.பெயிண்ட் அடிக்கப்படாத ஜன்னல் கம்பியில் எறும்பொன்று ஏறிக்கொண்டிருந்தது.வெயிலையும் எறும்பையும் மாறி மாறி வெறித்திருந்தவன் சலித்தவனாய் மேசையின் மீதிருந்த கால்களை எடுத்துக்கொண்டு நோட்டை சப்தமெழ எறிந்தான்.

கொவ்வை படர்ந்த வேலி

கொழுக்கட்டான் புற்கள் நன்றாக வளர்ந்திருந்தன.தொடர்மழைக்கு கொறங்காடுகள் அடர்ந்து இந்த வருஷம் குளுமையுற்றிருந்தது.கொறங்காட்டுக்குள் அடிக்கடி முயல்கள் ஓடுகின்றன.வேலியெங்கும் கிளிகள் கொத்திய கொவ்வைப்பழச்சாறு படிந்து வேலியடிகள் சிவந்திருக்கின்றன.ஊஞ்சல் மரத்தடியில் அமர்ந்திருந்தவனிடம் செம்மி வெள்ளாடு வந்து நின்றது.தலை தடவி விட்டவுடன் இவன் முதுகில் வந்து உரசியது.வெள்ளாடுகள் செம்மறி போல் மிரளியில்லை.