ரத்தமும் ஒயினும் கலந்த எழுத்து
உண்மையான ஓவியமென்பது இரத்தத்தைப்போல் உயிரணுவைப்போல் தசையிலிருந்து(guts) வரவேண்டும் என்பதாய் மரியா வர்கஸ் யோசாவின் சொர்க்கத்திற்கான பாதை(Way to Paradise) நாவலில் ஒரு வரி வரும். லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சியின் முக்கிய ஆளுமைகளான மார்க்வெஸ், யோசா, புயண்டஸ், ஹூலியோ கொர்த்தஸார் போன்றோரின் படைப்புக்களை வாசிக்கையில் அவர்களுடைய எழுத்துக்களுங்கூட தசையிலிருந்து தோன்றியவையாகவே உணர்கிறேன். நினைவு மற்றும் மீபுனைவாக்கத் தளங்களில் இயங்கிய போர்ஹேஸை இவர்களிடமிருந்து வேறுபட்டவராகச் சொல்லலாம். இவர்களைத் தவிர்த்து இவான் ருல்போ, அலேஹோ கார்ப்பெந்தியார், இவான் கார்லோஸ் ஒன்னெட்டி, இஸபெல்லா ஆலண்டே ஆகியோரை உள்ளிட்ட இன்னொரு நீண்ட வரிசையும் இருக்கிறது.