பல வருஷங்களுக்கு முன்பு, ஓரான் பாமுக் எழுதிய தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் (வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் என்றே இதை மனதில் கொண்டிருக்கிறேன், அறியாமையின் அருங்காட்சியகம் என்றல்ல) நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானவுடன் உடனடியாக வாசித்தேன். அப்போது நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. அது பாமுக்கின் முந்தைய படைப்புகளிலிருந்து சற்று கீழே இறங்கிவிட்டதாகத் தோன்றியது. நாவலின் அடிப்படையான ஆதார உணர்ச்சி பிடிபட்டாலும் அது வெகுஜனத் தன்மை உடைய நாவல் என்று தோன்றியது, இன்றைக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். சங்க இலக்கியம் தொடங்கி நாளது வரையான தமிழர்களின் கலையிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் காதல் ஒரு வதிபட்ட படிமம். நமது திரைப்படங்கள் காதலைத் துவைத்துக் காயப்போட்டிருக்கின்றன. நமது கற்பனையில் இருக்கும் வடிவத்தில், நிஜ வாழ்க்கையில் காதல் இல்லை.