கற்றாழைப்பச்சை
தன் வாழ்க்கையை அசைவற்றதாக லிங்கு மாற்றிக்கொண்டபின் பலகாலமாக அதிலிருந்து நூலளவும் மாறவில்லை. நவீனமான பலவற்றின் மூலம் தொடர்ச்சியாகத் தன்னைப் புதுப்பித்தவாறு உலகம் முன்னோக்கி இயங்குகையில் அதன் சிறு ஓசைகளைக்கூட கேட்க விருப்பமற்று செவிப்புலனை அடைத்துக்கொண்டு வெறும் காட்சிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அக்காட்சிகளையும் உள்ளிறங்க அனுமதிக்கவில்லை. பிம்பங்கள் கண்களில் மோதிச் சரிந்தன. பலசமயங்களில் தன்னைச்சுற்றிலும் வெறும் இருட்டை மட்டும் சமைத்துக்கொண்டு வெகுநாட்கள் அதற்குள் கிடப்பவர் ரசம் போய்விட்ட வாழ்க்கையைப் பொலிவூட்டிக்கொள்ளும் வேட்கையை இழந்துவிட்டிருந்தார்.