மேற்கே போகும் பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவன் உடல் தழுவிய சிலுசிலு காற்றை அனுபவித்தான்.மற்ற நேரமாயிருந்தால் உடல் கசகசப்போடு வியர்வையில் ஊறிக்கொண்டிருக்கும். இரு பக்கங்களிலும் பொட்டல் காடுகள் வறண்டு கிடக்க தூரத்தில் காற்றாடிகள் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. அந்த ஊருக்கு இன்றைக்குத்தான் முதன்முதலாக போகிறான். நாற்பது மைல் சுற்றளவுக்குள்ளேயே பதினேழு வயது வரை சுற்றிக் கொண்டிருக்கிறவனுக்கு வருங்காலத்தில் அங்கேதான் குடியேறவேண்டுமென்று நினைப்பிருக்கிறது.