Oct 20, 2024

கானகக் காமம்

சுடுபகல் கொடும்பாலைக் காற்றலையும்
கானகம் கடக்கையில்
நீர்க்கண்ணுறங்கும் புற்றிலிருந்து
பெருநாகம் படங்கொண்டது.

நிலம் நிதம்பமாகப் பிளவுற
வெக்கை மேகங்கள்
ஸ்தனங்களாகத் திரண்டன.

பெட்டையும் சிட்டும்
புன்சிரிப்பைக்
கிளையில் விட்டுப் பறக்க
வாய்விரித்துக்
கொக்காணி காட்டுகிறது ஓணான்

தீராக்காமம்
உமிழாயும் கண்ணீராயும் வழிய
வேலியோரக் கள்ளிச்செடியின் மீது
நஞ்செறிந்து நடந்தான்.

வேர் செத்த கணத்தில்
பெட்டையும் சிட்டும்
கள்ளி மீது வந்தமர
குளிர் திரும்பும் கானகத்திற்கு
இனி அவன் திரும்பப்போவதில்லை.

No comments: