கானகக் காமம்

சுடுபகல் கொடும்பாலைக் காற்றலையும்
கானகம் கடக்கையில்
நீர்க்கண்ணுறங்கும் புற்றிலிருந்து
பெருநாகம் படங்கொண்டது.

நிலம் நிதம்பமாகப் பிளவுற
வெக்கை மேகங்கள்
ஸ்தனங்களாகத் திரண்டன.

பெட்டையும் சிட்டும்
புன்சிரிப்பைக்
கிளையில் விட்டுப் பறக்க
வாய்விரித்துக்
கொக்காணி காட்டுகிறது ஓணான்

தீராக்காமம்
உமிழாயும் கண்ணீராயும் வழிய
வேலியோரக் கள்ளிச்செடியின் மீது
நஞ்செறிந்து நடந்தான்.

வேர் செத்த கணத்தில்
பெட்டையும் சிட்டும்
கள்ளி மீது வந்தமர
குளிர் திரும்பும் கானகத்திற்கு
இனி அவன் திரும்பப்போவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence